'ஆன்ட்டி' என்று அழைப்பதா..?- நடிகை பிரியாமணி கோபம்


ஆன்ட்டி என்று அழைப்பதா..?- நடிகை பிரியாமணி கோபம்
x

Image Credits : Instagram.com/pillumani

பிரியாமணி தனது வயது மற்றும் உடல் தோற்றத்தை வைத்து கேலி செய்வோரை கண்டிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பிரியாமணி 'பருத்திவீரன்' படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். ஏராளமான தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகும் படங்களில் பிஸியாக நடிக்கிறார்.

சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் தனது வயது மற்றும் உடல் தோற்றத்தை வைத்து கேலி செய்வோரை கண்டிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பிரியாமணி கூறும்போது, "ஆண்களில் 40 வயதை கடந்தாலும் அவர்களை யாரும் 'அங்கிள்' என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் பெண்கள் 40 வயதை கடந்துவிட்டால் போதும், உடனே 'ஆன்ட்டி' என்ற பேச்சுக்கு ஆளாகி விடுகிறார்கள்.

இதை ஏற்கும் அதேவேளையில், இப்படி கேலி செய்வோரும் அந்த 40, 50 வயது காலகட்டத்துக்கு நிச்சயம் வரத்தான் போகிறார்கள். இந்த வயது, உருவ கேலி குறித்து நான் கவலைப்பட போவதில்லை.

எனது வேலைகளில் கவனமாக இருக்கிறேன். எனக்கு வயது 39 ஆகிறது. நான் பார்க்க அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். என்னை நான் எப்போதுமே கவர்ச்சியாகவே உணருகிறேன். இதை மற்றவர்கள் ஏற்கிறார்களா? என்பது எனக்கு தேவையற்றது. அவர்களுக்கு புரிய வைப்பதும் என் வேலையல்ல.

ஆரம்பத்தில் ஆன்டி என்று கேலி செய்வதை பார்த்து கவலைப்பட்டேன். இப்போது அதிலிருந்து மீண்டுவிட்டேன். இதுபோன்ற கேலிக்கு முக்கியத்துவம் தரக்கூடாது என்பதும் புரிந்தது'' என்றார்.


Next Story