12 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி... கணவரை பிரிந்தார் 'ஆயுத எழுத்து' பட நடிகை ஈஷா தியோல்


12 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி... கணவரை பிரிந்தார் ஆயுத எழுத்து பட நடிகை ஈஷா தியோல்
x
தினத்தந்தி 8 Feb 2024 12:18 PM GMT (Updated: 8 Feb 2024 12:21 PM GMT)

நடிகை ஈஷா தியோல் கடந்த 2012ம் ஆண்டு பரத் தக்கானி என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.

சென்னை,

பிரபல நடிகை ஹேமமாலினி, தர்மேந்திரா தம்பதியின் மகளும் இந்தி நடிகையுமான இஷா தியோல் தமிழில் மணிரத்னம் இயக்கிய 'ஆயுத எழுத்து' படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து பிரபலமடைந்தார். இவர் இந்தியில் கோயி மேரே தில் சே பூசே, ஷாதி நம்பர் 1, தூம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

இவர் கடந்த 2012ம் ஆண்டு பரத் தக்கானி என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் கடந்த 2019ம் ஆண்டு 'கேக்வாக்' என்கிற குறும்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

இதற்கிடையே ஈஷா மற்றும் பரத் ஆகிய இருவரும் விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாக சில காலமாக தகவல்கள் வெளியாகின. மேலும் கடந்த ஆண்டு பிரமாண்டமாக நடைபெற்ற ஈஷா தியோலின் பிறந்த நாள் விழா உள்ளிட்ட அவர்களது எந்த குடும்ப நிகழ்ச்சியிலும் பரத் கலந்துகொள்ளாதது ரசிகர்களுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தனது 12 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து இருப்பதாக நடிகை ஈஷா தியோல் அறிவித்து உள்ளார். இதுகுறித்து இருவரும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், 'நாங்கள் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்து விட்டோம். குழந்தைகள் எங்களுக்கு முக்கியம்' என்று தெரிவித்து உள்ளனர். இவர்களின் இந்த அறிவிப்பு இந்தி திரையுலகில் பேசு பொருளாகி உள்ளது.


Next Story