பிரபல நடிகை ஆகான்க்சா துபே அடித்து, சித்ரவதை செய்து கொலை; தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு


பிரபல நடிகை ஆகான்க்சா துபே அடித்து, சித்ரவதை செய்து கொலை; தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு
x

பிரபல நடிகை ஆகான்க்சா துபே மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை என அவரது தாயார் கோரிக்கை விடுத்து உள்ளார்.

வாரணாசி,

உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பிரபல போஜ்புரி பட நடிகையான ஆகான்க்சா துபே (வயது 25) என்பவர் தூக்கு போட்ட நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை கண்டெடுக்கப்பட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆகான்க்சா, முதன்முறையாக மேரி ஜங் மேரா பைஸ்லா என்ற படத்தில் தனது 17 வயதில் நடித்து அறிமுகம் ஆனார்.

அதன்பின், போஜ்புரியில் வெளியான முஜ்சே ஷாதி கரோகி என்ற படத்திலும், வீரோன் கே வீர், பைட்டர் கிங், கசம் பைதா கர்ணே கி 2 மற்றும் பிற படங்களிலும் அவர் நடித்து உள்ளார்.

இவர், தனியாக 60 சூப்பர் ஹிட் இசை ஆல்பங்களையும் வெளியிட்டு உள்ளார். போஜ்புரியில் பிரபல நடிகர்களான கேசரி லால் யாதவ், பவன் சிங் மற்றும் பிரதீப் பாண்டே ஆகியோருடனும் ஒன்றாக நடித்து உள்ளார்.

சம்பவத்திற்கு முந்தின நாள் இரவு, பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியபடி, செல்பி வடிவிலான வீடியோ ஒன்றை பதிவு செய்து, தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். இந்நிலையில், தூக்கு போட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்து உள்ளது.

நடிகர் மற்றும் பாடகரான சமர் சிங் என்பவருடன் காதலில் இருந்த ஆகான்க்சா, அதுபற்றி சமீபத்தில், காதலர் தினத்தில் இன்ஸ்டாகிராமில் தங்களது காதலை அவர்கள் உறுதிப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில், படப்பிடிப்பு ஒன்றுக்காக ஓட்டலுக்கு வந்த அவர் மரணம் அடைந்து இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியது. அவரது மரணத்தில் மர்மம் உள்ளது என கூறப்படுகிறது. இதுபற்றி சக நடிகையான காஜல் ராகவானி வெளியிட்ட செய்தியில், உன்னால் உன்னை கொல்ல முடியும் என்று ஒருபோதும் நான் நம்பமாட்டேன்.

கடவுள் இருக்கிறார். அவர் நிச்சயம் உனது உயிருக்கான விலையை கொடுக்க செய்வார். இன்றில்லா விட்டாலும் நாளை, அது நடக்கும்.

உயிரை கொடுப்பதிலோ அல்லது யாருடைய உயிரையும் எடுப்பதிலோ, உண்மையான அன்பின் விலை வழங்கப்படுவதில்லை. வாழ்ந்தபோது இல்லாத மகிழ்ச்சியை இப்போது நீ பெற்றிருப்பாய் என நம்புகிறேன். நீ எங்கிருந்தபோதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, ஆகான்க்சா துபேவின் தாயார் மது கூறும்போது, சமருடன் ஆகான்க்சா 3 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார். ஆனால், ஒரு பைசா கூட கொடுத்தது இல்லை. அந்த வகையில் சமர் கொடுக்க வேண்டிய பணம் ரூ.3 கோடி இருக்கும்.

ஒரு ஆல்பத்திற்கு ரூ.70 ஆயிரம் வீதம் சமர் பணம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும், ஆகான்க்சா பணம் கேட்கும்போது, சமர் அவளை அடித்து, சித்ரவதை செய்து துன்புறுத்தி வந்துள்ளார். பிற கலைஞர்களுடன் பணியாற்ற முயற்சி செய்தபோதும், அவளை சமர் துன்புறுத்தி வந்து உள்ளார். சமரின் பல ஆல்பத்தில் ஆகான்க்சா பணியாற்றி உள்ளார் என கூறியுள்ளார்.

ஆகான்க்சா துபே மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை என அவர் கோரிக்கை விடுத்து உள்ளார். வாரணாசி போலீசார், மதுவின் புகாரின் பேரில் சமர் சிங் மற்றும் அவரது சகோதரர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.


Next Story