"எனக்கு ரசிகர் மன்றங்களுடன் எந்த சம்பந்தமும் இல்லை" - நடிகர் ஜெகபதிபாபு

Image Credits : Instagram.com/iamjaggubhai_
ரசிகர்கள் உதவி கேட்டு தொல்லை கொடுத்ததால் ரசிகர் மன்றங்களில் இருந்து விலகியதாக நடிகர் ஜெகபதிபாபு விளக்கம்.
பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு. இவர் தமிழில் தாண்டவம், புத்தகம், லிங்கா, கத்தி சண்டை, பைரவா, விஸ்வாசம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது சூர்யாவின் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
ஜெகபதிபாபுவுக்கு நிறைய ரசிகர் மன்றங்கள் உள்ளன. தற்போது ரசிகர்கள் உதவி கேட்டு தொல்லை கொடுத்ததால் வெறுத்து போனதாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து வலைத்தளத்தில் ஜெகபதி பாபு வெளியிட்டுள்ள பதிவில், "எனது 33 ஆண்டு சினிமா வாழ்வில் ரசிகர்கள்தான் என் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என நினைத்தேன். அவர்களின் குடும்ப விஷயங்களில் பங்கேற்றேன். ரசிகர்களை முழுமையாக நம்பினேன்.
ஆனால் சில ரசிகர்கள் அன்பை விட என்னிடம் எதிர்பார்ப்பது அதிகமாகிவிட்டது. என்னை இது மிகவும் வேதனைக்கு ஆளாக்கியது. அளவு கடந்த எதிர்பார்ப்புகளால் என்னை மிகவும் அவதிப்படுத்தும் நிலைக்கு கொண்டு வந்து தொல்லை கொடுத்தார்கள். மன வேதனையோடு சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், இனிமேல் எனக்கு ரசிகர் மன்றங்களுடன் எந்த சம்பந்தமும் இல்லை.
அதில் இருந்து நான் வெளியே வந்து விட்டேன். என்னை நேசித்து என்னிடம் இருந்து உண்மையான அன்பை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு மட்டும் எப்போதும் துணையாக நிற்பேன்'' என்று கூறியுள்ளார்.






