கணவரை பிரிகிறாரா ஐஸ்வர்யா ராய் - மீண்டும் வெடித்த விவாகரத்து சர்ச்சை


கணவரை பிரிகிறாரா ஐஸ்வர்யா ராய் - மீண்டும் வெடித்த விவாகரத்து சர்ச்சை
x
தினத்தந்தி 24 Jan 2024 8:45 PM GMT (Updated: 24 Jan 2024 8:45 PM GMT)

அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய் ஜோடி பிரிந்துவிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மும்பை,

உலக அழகி பட்டத்துடன் சினிமாவில் நுழைந்த ஐஸ்வர்யா ராய் இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதன்மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இவர் கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு கடந்த 2011-ம் ஆண்டு ஆராத்யா என்கிற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய், தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கிவிட்டார். சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கிடையில் ஆராத்யா படிக்கும் பள்ளியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய் தம்பதி பங்கேற்றதால் பிரச்சினைகள் முடிந்து விட்டதாக எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. அதை வெளிப்படுத்தும் விதமாக சமீபத்திய நிகழ்வுகளில் அபிஷேக் பச்சன் தனியாகவே பங்கேற்று வருகிறார். மேலும் இருவரும் தனித்தனியே வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தங்களது குழந்தைக்காக இணைந்து வாழ்ந்து வந்த அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய் ஜோடி பிரிந்துவிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


Next Story