கேரள தியேட்டர்களில் 22-ந் தேதி முதல் புதிய மலையாள படங்கள் திரையிடப்படாது என அறிவிப்பு


கேரள தியேட்டர்களில் 22-ந் தேதி முதல் புதிய மலையாள படங்கள் திரையிடப்படாது என அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Feb 2024 8:15 PM GMT (Updated: 18 Feb 2024 8:16 PM GMT)

முன்கூட்டியே ஓ.டி.டி. தளத்தில் படங்களை வெளியிடுவதை கண்டிக்கும் வகையில் வருகிற 22-ந் தேதி முதல் புதிய மலையாள படங்களை தியேட்டர்களில் திரையிட மாட்டோம் என்று அறிவித்து உள்ளனர்.

மலையாள படங்களை ஓ.டி.டி.யில் வெளியிடும் முடிவில் கேரள தியேட்டர் அதிபர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. புதிய படங்கள் தியேட்டரில் வெளியாகி 42 நாட்களுக்கு பிறகுதான் ஓ.டி.டி.யில் வெளியிட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் நிபந்தனை விதித்து உள்ளனர்.

இதனை தயாரிப்பாளர்களும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் இந்த நிபந்தனையை சில தயாரிப்பாளர்கள் மதிக்காமல் அடிக்கடி மீறி வருவதாக சர்ச்சைகள் கிளம்பின. இந்த நிலையில் மோகன்லால் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த மலைக்கோட்டை வாலிபன் படத்தை நிபந்தனையை மீறி முன்கூட்டியே ஓ.டி.டி.யில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இது தியேட்டர் அதிபர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினை குறித்து அவசர கூட்டம் நடத்தி ஆலோசித்தனர். அதில் நிபந்தனைகளை ஏற்காமல் முன்கூட்டியே ஓ.டி.டி. தளத்தில் படங்களை வெளியிடுவதை கண்டிக்கும் வகையில் வருகிற 22-ந் தேதி முதல் புதிய மலையாள படங்களை தியேட்டர்களில் திரையிட மாட்டோம் என்று அறிவித்து உள்ளனர். இது மலையாள பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story