"லியோ வெற்றி விழாவில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை"- வெளியான அறிவிப்பு


லியோ வெற்றி விழாவில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை- வெளியான அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Oct 2023 12:43 PM GMT (Updated: 31 Oct 2023 12:56 PM GMT)

லியோ வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை நடைபெற உள்ளது.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்த 'லியோ' திரைப்படம் கடந்த 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. பல்வேறு சர்ச்சைகளை தாண்டி வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையை படைத்தது. மேலும், லியோ திரைப்படம் 12 நாட்களில் உலக அளவில் ரூ.540 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

இந்த வெற்றியை கொண்டாட, நவம்பர் 1-ந்தேதி(நாளை) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்ட விழா நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த விழாவிற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி பெரியமேடு காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் லலித் குமார் மனு கொடுத்திருந்தார். விழாவில் விஜய்யும் கலந்துகொள்ள உள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து 'லியோ' வெற்றி விழாவுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியது.

விழாவிற்கு வரும் ரசிகர்களிடம் பாஸ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என ரசிகர் மன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ரசிகர் மன்ற அட்டை மற்றும் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர்கள், மாநகர, நகர, வட்ட, வார்டு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் என 6 ஆயிரம் பேர் மட்டும் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அரங்கத்திற்கு வரும்போது உறுப்பினர் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும், சரிபார்க்கப்பட்ட பின்னரே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உறுப்பினர் அல்லாத ரசிகர்களுக்கு லியோ வெற்றி விழாவில் கலந்துகொள்ள அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளதால், விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.


Next Story