ஆரியன் கான் வழக்கு விசாரணையில் அதிகாரிகளின் முறைகேடு... டெல்லிக்கு பறந்த அறிக்கை


ஆரியன் கான் வழக்கு விசாரணையில் அதிகாரிகளின் முறைகேடு... டெல்லிக்கு பறந்த அறிக்கை
x

சொகுசு கப்பலில் போதை விருந்து தொடர்புடைய ஆரியன் கான் வழக்கு விசாரணையில், சந்தேகத்திற்குரிய அதிகாரிகளின் முறைகேடு பற்றி டெல்லிக்கு அறிக்கை சென்றுள்ளது.



மும்பை,


மும்பையில் இருந்து கோவாவுக்கு 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெறுகிறது என போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் கப்பலில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கப்பலில் பயணித்த இந்தி நடிகர் ஷாருகானின் மகன் ஆர்யன் கான் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஆர்யன் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் 20 நாட்கள் சிறையில் இருந்த ஆர்யன் கான் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

சமீர் வான்கடே, ஆர்யன் கானை வழக்கிலிருந்து விடுவிக்க லஞ்சம் கேட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே, ஆர்யன் கானின் வழக்கை மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவில் இருந்து டெல்லி சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றி மத்திய போதைப்பொருள் தடுப்பு முகமை உத்தரவிட்டது.

இந்த வழக்கில் சிறப்பு விசாரணை குழு தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் 14 பேர் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இதில் ஷாருகானின் மகன் ஆர்யன் கான் பெயர் இடம்பெறவில்லை.

அதேவேளையில், ஆர்யன் கான் வழக்கில் இருந்து மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே கடந்த ஆண்டு நவம்பரில் விடுவிக்கப்பட்டு பகுப்பாய்வு மற்றும் இடர்பாடு மேலாண்மை இயக்குனரகத்தின் மும்பை பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் சிறப்பு விசாரணை குழு தாக்கல் செய்த அறிக்கையில், சமீர் வான்கடே உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை எனவும் விசாரணையை சரிவர நடத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சமீர் வான்கடே மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி நிதித்துறை அமைச்சகத்திற்கு மத்திய அரசு பரிந்துரை வழங்கியது. இதன் தொடர்ச்சியாக, வரிசேவை இயக்குனரகத்தின் சென்னை பிரிவிற்கு சமீர் வான்கடே இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஆர்யன் கான் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிலரிடம் போதை பொருள் காணப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கில் பங்காற்றிய 7 முதல் 8 போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் செயல்பாடு சந்தேகத்திற்குரிய வகையில் உள்ளது என அதிகாரிகள் தரப்பில் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது.

ஆர்யன் கான் வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக 65 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. சிலர் 3 முதல் 4 முறை வாக்குமூலங்களை மாற்றினர். இந்த வழக்கில், மிரட்டி பணம் பறித்தல் நடந்து உள்ளது என்றும் அந்த பணம், ஆர்யன் கான் மற்றும் பிற செல்வாக்கு பெற்ற நபர்களுக்கு எதிரான வழக்கை தடுக்கும் நோக்கில் மிரட்டி, கேட்கப்பட்டு உள்ளது என்றும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அது பெரிய அளவில் வெளிவரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்தே, இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளின் முறைகேடுகள் பற்றி விசாரணை மேற்கொள்ள போதை பொருள் தடுப்பு வாரியம் சார்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு அதன் விசாரணை அறிக்கை டெல்லி தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் இன்று தெரிவித்து உள்ளனர்.

ஆர்யன் கான் மற்றும் மற்ற 5 பேருக்கு எதிராக போதிய சான்றுகளை கண்டறிய முடியவில்லை என போதை பொருள் தடுப்பு வாரியம் தரப்பில் கூறப்பட்டு, அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும், 3 வார சிறை தண்டனைக்கு பின்பு, ஆர்யன் கான் விடுவிக்கப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது.


Next Story