நடிகை திரிஷாவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மன்சூர் அலிகான் வழக்கு


நடிகை திரிஷாவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மன்சூர் அலிகான் வழக்கு
x
தினத்தந்தி 8 Dec 2023 5:01 PM GMT (Updated: 8 Dec 2023 5:46 PM GMT)

நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த வழக்கு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

சென்னை,

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடிகை திரிஷா தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

திரிஷாவை தொடர்ந்து குஷ்பு, சிரஞ்சீவி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதேபோல மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார் எனவும் தென்னிந்திய நடிகர் சங்கமும் எச்சரிக்கை விடுத்தது.

அத்துடன், மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோருக்கு, டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சர்ச்சை பேச்சு குறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கோரி மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் வழங்கினர்.

இந்த சம்மனை ஏற்று நடிகர் மன்சூர் அலிகான், ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு நேரில் வந்து விளக்கம் அளித்தார். இதனை தொடர்ந்து, மன்சூர் அலிகான் வெளியிட்ட ஒரு அறிக்கையில், திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார். மன்சூர் அலிகானின் அறிக்கை வெளியாகி சில மணி நேரங்களில் நடிகை திரிஷா தனது 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், 'தவறு செய்வது மனித இயல்பு, அதை மன்னிப்பது தெய்வத்தன்மை' என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில், நடிகை திரிஷா மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன் என நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், நடிகைகள் திரிஷா மற்றும் குஷ்புவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் நடிகர் மன்சூர் அலிகான் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் தலா ரூ.1 கோடி தர உத்தரவிடக்கோரி மன்சூர் அலிகான் மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்துள்ளார். மன்சூர் அலிகான் தாக்கல் செய்த வழக்கு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.


Next Story