பிரபல வங்காள மொழி நடிகை மர்ம மரணம்


பிரபல வங்காள மொழி நடிகை மர்ம மரணம்
x

பிரபல வங்காள மொழி நடிகை பிதிஷா டி மஜும்தார் தனது குடியிருப்பில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் டம்டம் என்ற இடத்தில் நாகர்பஜார் பகுதியில் உள்ள வாடகை குடியிருப்பு ஒன்றில் கடந்த 4 மாதங்களாக வசித்து வந்தவர் பிதிஷா டி மஜும்தார் (வயது 21).

பிரபல மாடலான இவர் வங்காள மொழி படத்திலும் நடித்து உள்ளார். இந்நிலையில், பிதிஷா தனது குடியிருப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து நேற்று மாலை அவரது குடியிருப்புக்கு வந்த பேரக்பூர் நகர போலீசார் குடியிருப்பின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். தூக்கில் தொங்கிய பிதிஷாவின் உடலை கைப்பற்றி ஆர்.ஜி. கர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அந்த குடியிருப்பில் தற்கொலை குறிப்பு ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். பிதிஷாவுக்கு அனுபாப் பேரா என்ற காதலர் உள்ளார். அவருடனான நட்புறவால் பிதிஷா மனஅழுத்தத்தில் இருந்துள்ளார் என பிதிஷாவின் தோழிகள் கூறியுள்ளனர்.

கடந்த 2021ம் ஆண்டில் வெளிவந்த பார்-தி கிளவுன் என்ற பெயரிடப்பட்ட குறும்படம் ஒன்றில் அனீர்பெட் சட்டோபாத்யாய் இயக்கத்தில் முதன்முறையாக பிதிஷா அறிமுக நடிகையானார். அந்த படத்தில் பிரபல நடிகர் தேப்ராஜ் முகர்ஜி நாயகனாக நடித்துள்ளார்.

கடந்த 15ந்தேதி வங்காளத்தின் பிரபல தொலைக்காட்சி நடிகையான பல்லவி டே கொல்கத்தாவில் உள்ள தனது குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தொடக்க கட்ட விசாரணையில் அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது என்று போலீசார் கூறினர். இந்நிலையில், கொல்கத்தாவில் 10 நாட்களுக்குள் பிரபல நடிகைகள் இருவர் உயிரிழந்து உள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


Next Story