தியேட்டருக்குள் மோதிக்கொண்ட பவன் கல்யான் - ஜெகன் மோகன் ரெட்டி தொண்டர்கள்... ஐதராபாத்தில் பரபரப்பு


தியேட்டருக்குள் மோதிக்கொண்ட பவன் கல்யான் - ஜெகன் மோகன் ரெட்டி தொண்டர்கள்... ஐதராபாத்தில் பரபரப்பு
x

'யாத்ரா-2' படத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார்.

சென்னை,

மறைந்த ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை கதை, 'யாத்ரா' என்ற பெயரில் 2019-ல் திரைப்படமாக வெளிவந்தது. இதில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து இருந்தார். இதன் தொடர்ச்சியாக ராஜசேகர ரெட்டியின் மகனும் தற்போதைய ஆந்திர முதல்-மந்திரியுமான ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை கதை 'யாத்ரா-2' என்ற பெயரில் உருவாகி உள்ளது.

மஹி வி ராகவ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஜெகன் மோகன் ரெட்டியின் இளம்வயது அரசியல் வாழ்க்கையில் இருந்து ஆந்திர முதல்-மந்திரியானது வரை நடந்த சம்பவங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதற்கிடையே இந்த படம் இன்று வெளியான நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி தொண்டர்கள் தியேட்டருக்கு வந்து மேள தாளத்துடன், வெடி வெடித்துக் கொண்டாடினர். அதேபோல பவன் கல்யாணின் 'கேமராமேன் கங்காதோ ராம்பாபு' என்ற படமும் கடந்த 7ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. பவன் கல்யாணின் ரசிகர்களும் இந்த படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் இரண்டு திரைப்படங்களும் வெளியானது. அந்த தியேட்டரில் ஒரு திரையில் இன்று காலை 'யாத்ரா-2' திரைப்படம் வெளியானது. அப்போது அங்கு படம் பார்த்து கொண்டிருந்த பவன் கல்யான் - ஜெகன் மோகன் ரெட்டி தொடர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த வாக்குவாதம் முற்றி இரு பிரிவினரும் தியேட்டருக்குள் மோதிக்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story