"ராஜமவுலி மீது கொலை வெறி " குடி போதையில் ராம்கோபால் வர்மா உளறல்


ராஜமவுலி மீது கொலை வெறி  குடி போதையில் ராம்கோபால் வர்மா உளறல்
x

உலகளவில் ரீச் ஆன ராஜமவுலி குறித்து பிரபல தெலுங்கு பட இயக்குனரான ராம்கோபால் வர்மா பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

ஐதராபாத்


தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. மாவீரா, நான் ஈ, போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த ராஜமவுலி, பாகுபலி படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி பிளாக்பஸ்டர் வெற்றிகண்ட அவர், அடுத்ததாக ஆர்.ஆர்.ஆர் என்கிற சரித்திர கதையம்சம் கொண்ட படத்தை இயக்கினார்.

ராம்சரண் சீதா ராமராஜுவாகவும், ஜூனியர் என்.டி.ஆர் கொமரம் பீம் ஆகவும் நடித்திருந்த இப்படம் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ரூ.1100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தற்போது விருதுகளை வென்று குவித்து வருகிறது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெறும் நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை சமீபத்தில் வென்று அசத்தியது.

அதேபோல் சினிமா உலகின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான இறுதி நாமினேஷன் பட்டியலிலும் நாட்டு நாட்டு பாடல் இடம்பெற்று உள்ளது. இதுதவிர ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், சமீபத்தில் இயக்குனர் ராஜமவுலியை சந்தித்து அவரிடம் ஆர்.ஆர்.ஆர் படத்தை இரண்டு முறை பார்த்து ரசித்ததாக வியந்து கூறி இருந்தார். அதோடு ஹாலிவுட் படம் இயக்க ஐடியா இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

இப்படி உலகளவில் ரீச் ஆன ராஜமவுலி குறித்து பிரபல தெலுங்கு பட இயக்குனரான ராம்கோபால் வர்மா பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. சர்ச்சைக்குரிய பெயர் பெற்ற ராம் கோபால் வர்மா மீண்டும் களத்தில் குதித்து உள்ளார்!

அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டில் "ராஜமவுலி சார் உங்களுக்கான பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ளுங்கள். உங்கள் மீதுள்ள பொறாமையால் சில இயக்குனர்கள் உங்களைக் கொல்ல குழு ஒன்றை அமைத்துள்ளனர். அந்த குழுவில் நானும் இருக்கிறேன். தற்போது குடிபோதையில் இருப்பதால் நான் உண்மையை கூறிவிட்டேன்" என பதிவிட்டுள்ளார். ராம்கோபால் வர்மா குடி போதையில் இப்படி உளறி இருப்பதை அறிந்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக சாடி வருகின்றனர்.


Next Story