ராமர் கோவில் கும்பாபிஷேகம்: சீரியலில் ராமர்-சீதையாக நடித்த நடிகர்களுக்கு அழைப்பு


ராமர் கோவில் கும்பாபிஷேகம்: சீரியலில் ராமர்-சீதையாக நடித்த நடிகர்களுக்கு அழைப்பு
x
தினத்தந்தி 6 Jan 2024 1:33 AM GMT (Updated: 9 Jan 2024 9:34 AM GMT)

விழாவில் பங்கேற்க திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

அயோத்தி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தரபிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க ஆளும் மாநில முதல்-மந்திரிகள் கலந்துகொள்ள உள்ளனர். பா.ஜ.க.வைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த விழாவில் பங்கேற்க திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன். பிரபாஸ், கங்கனா ரணாவத் உள்பட இந்திய முன்னணி நடிகர், நடிகைகள் பலருக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த வரிசையில் தொலைக்காட்சி தொடரில் ராமர், சீதை வேடங்களில் நடித்துள்ள அருண் கோவில், தீபிகா சிக்லியா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

தூர்தர்ஷன் தொலைக்கட்சியில் 1980-களில் ஒளிபரப்பான ராமாயணம் தொடர் இந்தியா முழுவதும் பெரிய வரவேற்பை பெற்றது. அருண் கோவிலையும், தீபிகா சிக்லியாவையும் நிஜமாகவே ராமர், சீதை என்று பலர் வழிபட்டனர். பல வீடுகளில் இவர்களின் புகைப்படங்கள் ராமர், சீதையாக மாட்டப்பட்டு இருந்தன. இத்தனை வருடங்கள் கடந்த பிறகும் அந்த தொடர் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. தற்போது இருவரும் இந்தி படங்களில் நடித்து வருகின்றனர்.


Next Story