ஷாருக் கானா, யாரது? என கேட்ட முதல்-மந்திரி; அதிகாலை 2 மணிக்கு அழைத்த தொலைபேசி மணி


ஷாருக் கானா, யாரது? என கேட்ட முதல்-மந்திரி; அதிகாலை 2 மணிக்கு அழைத்த தொலைபேசி மணி
x
தினத்தந்தி 22 Jan 2023 8:24 AM GMT (Updated: 22 Jan 2023 8:27 AM GMT)

ஷாருக் கான் யார்? என அசாம் முதல்-மந்திரி கேட்ட நிலையில், இன்று அதிகாலை 2 மணிக்கு அவரை நடிகர் ஷாருக் கான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.



கவுகாத்தி,


நடிகர் ஷாருக் கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவான திரைப்படம் பதான். வரும் 25-ந்தேதி படம் திரையரங்கிற்கு வர திட்டமிடப்பட்டு உள்ளது. இதனையொட்டி படத்தின் டிரைலர் மற்றும் பாடல் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது.

இதில், பேஷாராம் ரங் பாடலானது கடும் சர்ச்சையை கிளப்பியது. அதில் நடித்துள்ள தீபிகா படுகோனே காவி நிற, பிகினி உடையில், படுகவர்ச்சியுடன் காணப்படுகிறார் என சர்ச்சை வெடித்தது.

இது இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் உள்ளது என பல்வேறு இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த பாடலுக்கு தடை கோரி வழக்கும் தொடுக்கப்பட்டது.

அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர், காவி நிறம் கொச்சைப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் நடிகர் ஷாருக் கானை நேரில் பார்த்தால் உயிருடன் கொளுத்தி விடுவேன் என்றும் கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.

யாராவது ஷாருக் கானை உயிரோடு எரித்தால், அவருக்காக நீதிமன்றம் வரை சென்று ஆதரவு தெரிவிப்பேன். காவி நிற அவமதிப்பு செய்த பதான் படம் திரையிடும் திரையரங்குகளையும் எரிப்போம் என அவர் கூறி எச்சரிக்கை விடுத்தும் பேசினார்.

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசும்போது, நடிகர் ஷாருக் கானின் புதிய படத்தில் காவி நிற ஆடைகளை அணிந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி, காவி நிறம் இந்துக்களுக்கு உரியது மற்றும் பச்சை நிறம் என்றால் அது முஸ்லிம்களுக்கு உரிய ஒன்றா? என்ன இது? பசுக்கள் என்றால் இந்துக்களுக்கும் மற்றும் எருது என்றால் முஸ்லிம்களுக்கும் உரிய ஒன்றா? என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்த பட விவகாரம் பற்றி பா.ஜ.க. மந்திரி நரோட்டம் மிஷ்ரா கூறும்போது, படத்துடன், பேஷாராம் ராங் பாடலும் எதிர்ப்புக்கு உரியது. காவி மற்றும் பச்சை நிற ஆடைகள் அணிந்துள்ள விதம், பாடலின் வண்ணம், வரிகள் மற்றும் திரைப்படத்தின் பெயரே விவகாரத்திற்கு உரியது என்று கூறினார்.

எனினும், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த விவாதமே அடிப்படையற்றது என கூறி சர்ச்சை தேவையற்றது என தவிர்த்தனர்.

இந்த சூழலில், குஜராத்தின் ஆமதாபாத் நகரில் வஸ்திராப்பூர் பகுதியில் பதான் பட விளம்பர நிகழ்ச்சி ஒன்று கடந்த இரு வாரங்களுக்கு முன் நடந்தது. இதில், ஆல்பா ஒன் மாலில் நடந்த நிகழ்ச்சியின்போது, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஒரு பிரிவினரான பஜ்ரங்தள அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் உள்ளே புகுந்தனர்.

அவர்கள் படத்தில் நடித்துள்ள நடிகர் ஷாருக் கான், பிற நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள், போஸ்டர்கள், பெரிய அளவிலான கட்-அவுட்டுகள் உள்ளிட்டவற்றை கிழித்து, வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த படம் திரையிடப்பட்டால், இதனை விட கடுமையான போராட்டம் நடத்தப்படும் என அந்த வணிகவளாக நிர்வாகத்தினருக்கு எச்சரிக்கை விடுத்து, அவர்கள் கோஷங்களையும் எழுப்பினர். இந்த காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளிவந்தன.

அதற்கு இரு தினங்களுக்கு முன்பு, மத்திய பிரதேசத்தில் ஐநாக்ஸ் தியேட்டரிலும் இந்து ஜக்ரான் மஞ்ச் அமைப்பின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, படம் திரையிடப்பட கூடாது என்று திரையரங்க நிர்வாகத்தினரிடம் கூறி விட்டு சென்றனர்.

இந்த சூழலில், அசாமில் கவுகாத்தி நகரில் பதான் படம் வெளியாக கூடிய திரையரங்குகளுக்குள் புகுந்த பஜ்ரங் தள அமைப்பினர் போஸ்டர்களை கிழித்து, எரித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இதுபற்றி அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ஷாருக் கான் யார்? அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவரது பதான் படம் பற்றியும் எனக்கு தெரியாது என பதிலளித்து பேசினார்.

அதன்பின் அவர் கூறும்போது, மாநில மக்கள் அசாமை பற்றி கவலைப்பட வேண்டும். இந்தி திரைப்படங்களை பற்றி அல்ல என்றும் முதல்-மந்திரி பிஸ்வா கூறினார்.

ஷாருக் கான் என்னை தொடர்பு கொண்டு பேசவில்லை. ஒருவேளை, அவர் என்னை தொடர்பு கொண்டால் அதுபற்றி விசாரிப்பேன். சட்டம் மற்றும் ஒழுங்கு மீறப்பட்டு இருந்தால், வழக்கு பதிவு செய்யப்படும் என கூறினார்.

இந்நிலையில், இன்று அதிகாலை அசாம் முதல்-மந்திரிக்கு தொலைபேசி மணி அழைப்பு வந்துள்ளது. அதனை எடுத்து பேசியபோது, மறுமுனையில் நடிகர் ஷாருக் கான் அவரிடம் பேசியுள்ளார்.

இதுபற்றி தனது டுவிட்டரில் முதல்-மந்திரி பிஸ்வா வெளியிட்டு உள்ள செய்தியில், பாலிவுட் நடிகர் ஷாருக் கான் என்னை இன்று அதிகாலை 2 மணியளவில் தொடர்பு கொண்டு பேசினார்.

அவரது படம் திரையிடப்பட்டபோது, கவுகாத்தி நகரில் நடந்த சம்பவம் பற்றி வருத்தம் தெரிவித்து பேசினார். மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது அரசின் கடமை என அவருக்கு உறுதி கூறினேன்.

இதுபற்றி நாங்கள் விசாரணை செய்து, அதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என அந்த பதிவில் தெரிவித்து உள்ளார்.




Next Story