சூர்யாவின் 'வாடிவாசல்' படம் குறித்த புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் வெற்றிமாறன்


சூர்யாவின்  வாடிவாசல் படம் குறித்த புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் வெற்றிமாறன்
x
தினத்தந்தி 12 April 2024 12:48 PM GMT (Updated: 13 April 2024 12:17 PM GMT)

வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் அறிவிக்கப்பட்ட 'வாடிவாசல்' திரைப்படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் அப்டேட் கொடுத்திருக்கிறார்.

சென்னை,

தனுஷ் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின்னர் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார். தற்போது விடுதலை படத்தின் 2 பாகத்தை இயக்கி வருகிறார்.

விடுதலை-2 படத்திற்கு பிறகு இவர் சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' என்ற படத்தை இயக்க உள்ளார். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராகிறது. மெரினா போராட்டம் மூலம் உலக அளவில் பிரபலமான ஜல்லிக்கட்டு படத்தில் சூர்யா நடிப்பதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்காக டெஸ்ட் ஷூட் சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் எடுக்கப்பட்டு அந்தப் புகைப்படங்களும் வெளியானது. மேலும், இந்தப் படத்திற்காக வாடிவாசல் காளையை தன் வீட்டில் வளர்த்து பயிற்சி எடுத்து வந்தார் சூர்யா. ஆனால், டெஸ்ட் ஷூட் முடிந்த பிறகு படம் குறித்து எந்தவிதமான அப்டேட்டும் இல்லை. வெற்றிமாறன் 'விடுதலை2' படப்பிடிப்பில் பிஸியாக, சூர்யாவோ 'கங்குவா', 'புறநானூறு', கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படம் என அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதனால், படம் கைவிடப்பட்டு விட்டது என்றும் இதில் நடிப்பதாக இருந்த சூர்யா படத்தில் இருந்து விலகி விட்டார் எனவும் செய்திகள் வெளியானது. ஆனால், இதுகுறித்து வெற்றிமாறன் - சூர்யா தரப்பில் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இப்படியான சூழ்நிலையில்தான் இயக்குனர் வெற்றிமாறன் 'வாடிவாசல்' படம் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்க பதில் சொல்லியிருக்கிறார்.

"நான் எடுத்து முடித்த 'விடுதலை 2' படத்தின் ரிலீஸ் தேதியே எப்போன்னு எனக்குத் தெரியாது. இது முடிந்த பிறகு 'வாடிவாசல்' பட வேலைகள் இருக்கிறது. அதன் பிறகுதான் வேறு எந்தப் படம் என்பதே எனக்குத் தெரியும். அதனால், 'வடசென்னை 2' எடுப்பேனா இல்லையா என்பதும் எனக்குத் தெரியாது" என்று பேசியுள்ளார். இதனால், 'வாடிவாசல்' படப்பிடிப்பு நடக்கும் என்பதை ரசிகர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story