வங்காள தொலைக்காட்சி இளம் நடிகை சாலை விபத்தில் பலி; படப்பிடிப்பை முடித்து விட்டு திரும்பியபோது சோகம்


வங்காள தொலைக்காட்சி இளம் நடிகை சாலை விபத்தில் பலி; படப்பிடிப்பை முடித்து விட்டு திரும்பியபோது சோகம்
x

மேற்கு வங்காள தொலைக்காட்சியில் நடித்து வந்த இளம் நடிகை சுசந்திரா தாஸ்குப்தா சாலை விபத்தில் பலியாகி உள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பனிகதி ரெயில்வே பூங்கா பகுதியில் வசித்து வருபவர் நடிகை சுசந்திரா தாஸ்குப்தா (வயது 29).

அவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உள்ளார். சிறு, சிறு வேடங்களை ஏற்று நடித்து வந்து உள்ளார்.

இந்த நிலையில், கவுரி எலோ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு நேற்றிரவு பைக் ஒன்றில் வீட்டுக்கு திரும்பி உள்ளார்.

இவர்கள் பராநகர் கோஷ்பாரா சாலையில் செல்லும்போது குறுக்கே திடீரென சைக்கிள் ஒன்று வந்து உள்ளது. இதனால், செயலி வழியே இயங்க கூடிய பைக்கை ஓட்டிய நபர் பிரேக் போட முயற்சித்து உள்ளார்.

இதில், பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த சுசந்திரா கீழே விழுந்து உள்ளார். இந்த சம்பவத்தில் அந்த வழியே டிரக் ஒன்று நடிகை சுசந்திரா மீது மோதி உள்ளது. உடனடியாக லாரி ஓட்டுநர் வண்டியை நிறுத்தி உள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரணைக்கு கொண்டு சென்றனர்.

சுசந்திராவின் கணவர் தேப்ஜோதி சென்குப்தா கூறும்போது, பல தொடர்களில் சிறிது காலம் வரை அவர் சிறிய வேடங்களில் நடித்து உள்ளார். ஆனால், நடிப்பதில் அவர் அடிமையாகி விட்டார். சில நேரங்களில் படப்பிடிப்புக்காக வெளியே செல்வார். நேற்றும் இதேபோன்று நிகழ்ச்சி ஒன்றுக்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்று விட்டு பைக்கில் திரும்பினார் என கூறியுள்ளார்.

அவரது மறைவு செய்தி அறிந்து திரை துறையினர், தோழிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.


Next Story