மீண்டும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு; ரஜினி, நயன்தாரா நடித்த காட்சிகள் படமானது

கொரோனா ஊரடங்கை தளர்த்தியதும் ஐதராபாத்தில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பை கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியபோது படக்குழுவை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றில் சிக்கியதால் படப்பிடிப்பை நிறுத்தினர்.
ரஜினிகாந்துக்கு பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்பது உறுதியானது. ஆனாலும் சில நாட்கள் ஐதராபாத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார். பின்னர் சென்னை திரும்பிய ரஜினிகாந்த் உடல்நிலையை கருதி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தார். வீட்டிலேயே ஓய்வு எடுத்தும் வந்தார். இந்த நிலையில் ரஜினி சம்மதத்துடன் சென்னையில் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் தயாரானார்கள். பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் இதற்காக அரங்குகள் அமைக்கப்பட்டன. தற்போது அங்கு படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இதில் கிளைமாக்ஸ் காட்சிகளும் சண்டை காட்சியும் படமாக்கப்படுவதாகவும், ரஜினிகாந்தும், நயன்தாராவும் பங்கேற்று நடித்து வருவதாகவும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஓரிரு வாரத்தில் முழு படப்பிடிப்பையும் முடிக்க உள்ளனர். அண்ணாத்த தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
Related Tags :
Next Story