சர்ச்சை நடிகை போலீசில் ஆஜர்


சர்ச்சை நடிகை போலீசில் ஆஜர்
x
தினத்தந்தி 21 Jun 2021 12:53 PM GMT (Updated: 21 Jun 2021 12:53 PM GMT)

பிரபல மலையாள நடிகையும், டைரக்டருமான ஆயிஷா சுல்தானா லட்சத்தீவில் கொரோனா பரவல் தொடர்பாக மத்திய அரசை விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார்.

ஏற்கனவே லட்சத்தீவில் நில உரிமைகள் தொடர்பான விதிகளில் மாற்றம் செய்வதை எதிர்த்து மலையாள நடிகர், நடிகைகள் மத்திய அரசை சாடி வருகிறார்கள். இந்த நிலையில் ஆயிஷாவின் கொரோனா பற்றிய பேச்சு பரபரப்பாகி அவருக்கு எதிர்ப்பை கிளப்பியது. ஆயிஷா மீது நடவடிக்கை எடுக்கும்படி லட்சத்தீவை சேர்ந்த பா.ஜனதா தலைவர் அப்துல் காதர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து ஆயிஷா மீது 124 ஏ மற்றும் 153 பி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் ஆயிஷா கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி ஆயிஷா கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கில் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். இதையடுத்து போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராக ஆயிஷா லட்சத்தீவு புறப்பட்டுச் சென்றார்.

Next Story