வீரமே வாகை சூடம் படத்தின் நாயகிக்கு கொரோனா தொற்று


வீரமே வாகை சூடம் படத்தின் நாயகிக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 17 Jan 2022 5:59 PM GMT (Updated: 17 Jan 2022 5:59 PM GMT)

வீரமே வாகை சூடம் படத்தின் கதாநாயகி டிம்பிள் ஹயாத்திக்கு கொரோனா தொற்று உறுதியானதை அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளம் வரும் நடிகை டிம்பிள் ஹயாத்தி, தெலுங்கில் கல்ப் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் இயக்குனர் A.L.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்த தேவி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற, நடிகர் தனுஷ் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான அத்ரங்கி ரே படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் டிம்பிள் ஹயாத்தி.

தற்போது நடிகர் விஷால் நடிப்பில் வருகிற ஜனவரி 26 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள வீரமே வாகை சூடும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள டிம்பிள் ஹயாத்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகை டிம்பிள் ஹயாத்தி அவருடைய வலைத்தளப் பக்கத்தில், அனைவருக்கும் வணக்கம், அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியும் எனக்கு நேற்று (ஜனவரி 15) கோவிட் 19 பாசிட்டிவ் ஆனது. லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கிறது மற்றபடி நலமாக இருக்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறேன். 2 தடுப்பூசிகளும் எடுத்துக் கொண்டதால் எனக்கு அறிகுறிகள் லேசாக இருக்கிறது. அனைவரும் தயவுசெய்து தடுப்பூசி எடுத்துக் கொண்டு முக கவசங்களை அணிந்துகொண்டு, பாதுகாப்போடு இருங்கள்.
இன்னும் வலிமையோடு மீண்டு வருவேன் என்று பதிவிட்டுள்ளார்.

Next Story