நேர்மை, கட்டுப்பாடு, சில விதிமுறைகள் வைத்து திருடுவதை தொழிலாக கொண்ட கும்பல் - கடத்தல்காரன் விமர்சனம்


நேர்மை, கட்டுப்பாடு, சில விதிமுறைகள் வைத்து திருடுவதை தொழிலாக கொண்ட கும்பல் - கடத்தல்காரன் விமர்சனம்
x
தினத்தந்தி 9 Dec 2020 10:13 AM GMT (Updated: 9 Dec 2020 10:13 AM GMT)

ஒரு கிராமத்துக் கதையை ‘சஸ்பென்ஸ் திரில்லர்’க்கே உரிய விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார், டைரக்டர் எஸ்.குமார். கடத்தல்காரன் படத்தின் சினிமா விமர்சனம்.

கருவாக்கோட்டை, ஒரு வித்தியாசமான கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர்களுக்கு திருடுவதுதான் தொழில். அந்த தொழிலிலும் நேர்மையை பின்பற்றுகிறார்கள். சில விதிமுறைகளை கட்டுப்பாடுகளாக வைத்து இருக்கிறார்கள். பக்கத்து ஊரை சேர்ந்த மோசமான போலீஸ் அதிகாரி தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்கிறார். விடிந்தால் திருமணம் என்ற நிலையில், மணமகள் காதலனுடன் ஓடிப்போக முடிவு செய்கிறாள். அதே நேரத்தில், போலீஸ் அதிகாரி வீட்டில் திருடுவதற்கு கருவாக்கோட்டை கும்பல் வருகிறது. மணமகள் காதலரின் காரில் ஏறுவதற்கு பதில், திருடர்களின் காரில் ஏறிவிடுகிறாள். அவளை ஊர் தலைவரிடம் ஒப்படைக்கிறார்கள்.

அதன் பிறகு அவள் என்ன ஆகிறாள், காதலருடன் சேர்ந்தாளா, இல்லையா? என்பது மீதி கதை. கெவின் காதல், மோதல், நகைச்சுவை என்று ஒரு கதாநாயகனுக்கே உரிய வேலைகளை கச்சிதமாக செய்திருக்கிறார். ரேணு சவுந்தர், கிராமத்து அழகி கதாபாத்திரத்துக்கு பொருந்துகிறார். கடத்தப்பட்ட பெண்ணுக்கே உரிய பதற்றத்தை மிக தெளிவாக வெளிப்படுத்துகிறார்.

மற்ற கதாபாத்திரங்களில் அனைவரும் புதுமுகங்கள். அதுவே கதைக்கு ஜீவனாக அமைந்திருக்கிறது. எஸ்.ஸ்ரீராம் ஒளிப்பதிவும், எல்.வி.கணேஷ் இசையும் படத்துக்கு கூடுதல் அம்சங்கள். பாடல்களும், பின்னணி இசையும் கதையுடன் இசைந்துள்ளன.

ஒரு கிராமத்துக் கதையை ‘சஸ்பென்ஸ் திரில்லர்’க்கே உரிய விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார், டைரக்டர் எஸ்.குமார். படத்தின் ஆரம்பமும், முடிவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. இடையில் சில காட்சிகள், மலிவான கற்பனை. இரட்டை அர்த்த விரும்பிகளுக்கு விருந்து. ‘டைட்டில்’, கதையுடன் பக்காவாக பொருந்தி இருக்கிறது.

Next Story