சமந்தா-நாகசைதன்யா விவாகரத்து: வதந்திகள் குறித்து நாகார்ஜூனா விளக்கம்


சமந்தா-நாகசைதன்யா விவாகரத்து: வதந்திகள் குறித்து நாகார்ஜூனா விளக்கம்
x
தினத்தந்தி 27 Jan 2022 6:02 PM GMT (Updated: 27 Jan 2022 6:02 PM GMT)

சமந்தா-நாகசைதன்யா விவாகரத்து குறித்து வதந்திகளை வெளியிட வேண்டாம் என்று நாகார்ஜூனா கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை,

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணத்துக்கு பிறகும் திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த சமந்தா அடுத்தடுத்து வெற்றிப் படங்களையும் கொடுத்தார்.

திடீரென சமந்தாவும் நாக சைதன்யாவும் விவாகரத்து செய்ய இருப்பதாக ஒரே நேரத்தில் தங்களது சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். இந்த செய்தி இருவரின் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 சமீபத்தில் நாக சைதன்யா அளித்த பேட்டியில், திரைப்படங்களில் தனக்கு ஏற்ற ஜோடி சமந்தாதான் என்று கூறியிருந்தார். அதன்பின் நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்த விவாகரத்து தொடர்பான பதிவை நீக்கினார். இதை வைத்து இருவரும் மீண்டும் இணைய இருப்பதாக கூறப்பட்டது. 

இதையடுத்து விவாகரத்து முடிவை முதலில் எடுத்தது சமந்தா என்றும் அதன் பிறகு நாக சைதன்யா ஒத்துக் கொண்டதாகவும் நாகார்ஜூனா கூறியதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் நடிகர் நாகார்ஜூனா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். 

இது போலியான செய்தி என்று கூறியுள்ள அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'சமந்தா மற்றும் நாகசைதன்யா பற்றிய எனது அறிக்கையை மேற்கோள்காட்டி சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் முற்றிலும் முட்டாள்தனம். வதந்திகளை செய்தியாக வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஊடக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

Next Story