முடி வளர்ச்சிக்கு உதவும் ‘சீயக்காய்’


முடி வளர்ச்சிக்கு உதவும் ‘சீயக்காய்’
x
தினத்தந்தி 5 Oct 2021 11:12 AM GMT (Updated: 5 Oct 2021 11:12 AM GMT)

முடி உதிர்தல் பிரச்சினை இருப்பவர்கள் வாரம் இரண்டு முறை சீயக்காய்த்தூள் பயன்படுத்தி, தலைக்குக் குளிக்கலாம்.

கூந்தலைப் பராமரிப்பதற்கு பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் பொருட்களில் ஒன்று சீயக்காய். 

சுற்றுச்சூழல் மாசு, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை போன்றவை முடி உதிர்தல் பிரச்சினையை அதிகரிக்கச் செய்கின்றன. 

இதைத் தடுப்பதற்கு பல்வேறு சிகிச்சை முறைகள் இருந்தாலும், இயற்கையான மற்றும் எளிமையான முறையே சீயக்காய்த்தூள் பயன்பாடு ஆகும்.

அசாசியா கோன்சின்னா மரத்தில் இருந்து பெறப்படும் சீயக்காய், வருடம் முழுவதும் எளிதில் கிடைக்கக்கூடியது. விலை மலிவானது. தீமை விளைவிக்கும் வேதிப்பொருட்கள் இல்லாதது.

சீயக்காய் பயன்படுத்துவதால் தலைப்பகுதியில் உள்ள சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும். முடியின் அமில, கார சமநிலை சீராகும். பொடுகு நீங்கும். சொறி, சிரங்கு, கொப்புளங்கள் போன்ற சரும பிரச்சினைகள் குணமாகும்.

முடி உதிர்தல் பிரச்சினை இருப்பவர்கள் வாரம் இரண்டு முறை சீயக்காய்த்தூள் பயன்படுத்தி, தலைக்குக் குளிக்கலாம். 

தலையில் தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்த பின்பு, சீயக்காயைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் கூந்தல் உதிர்வது, இளநரை, அரிப்பு போன்ற பிரச்சினைகள் தீரும்.

செம்பருத்தி, வெந்தயம், பூலாங்கிழங்கு, எலுமிச்சை பழத் தோல், பச்சை பயறு, காய்ந்த நெல்லி, ஆவாரம் பூ ஆகியவற்றை சீயக்காயுடன் கலந்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து, இந்தப் பொடியை உபயோகப்படுத்தி குளித்தால் கூந்தல் பொலிவுடன் இருக்கும்; வளர்ச்சி அதிகரிக்கும்.

சீயக்காய், எண்ணெய்ப் பசையை நீக்கி கூந்தலை மிருதுவாக்கும் தன்மை கொண்டது. இயற்கை கண்டிஷனராக செயல்படும். 

சீயக்காய் பயன்படுத்திய பின்பு தனியாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. 
 
சீயக்காயில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் கூந்தலின் வேர்களை வலுப்படுத்தி,  வளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் டி சருமத்திற்குப் புத்துணர்ச்சி அளிக்கும்.

Next Story