மன அழுத்தத்தில் உள்ள பெண்கள் அதிகமாக சாப்பிடுவது ஏன்?


மன அழுத்தத்தில் உள்ள பெண்கள் அதிகமாக சாப்பிடுவது ஏன்?
x
தினத்தந்தி 13 Oct 2021 7:18 AM GMT (Updated: 13 Oct 2021 7:18 AM GMT)

மன அழுத்தத்தில் இருக்கும்போது கார்டிசோல் எனும் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கிறது. இதன் மூலமாக மூளை அதிக அளவில் குளுக்கோஸை பயன்படுத்துவதால் பசி அதிகமாக ஏற்படுகிறது.

ன அழுத்தம் அனைவருக்கும் உண்டாகக்கூடியது என்றாலும், தொடர்ச்சியாக நீடிக்கும் பட்சத்தில் உடல் மற்றும் மனதில் பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

உடலில் குளுக்கோஸ் அளவு குறையும்போது கல்லீரல், வயிற்றுப் பகுதிக்கு ‘கெக்ரிலின்’ எனும் நொதியை உற்பத்தி செய்யும் சமிக்ஞையை அனுப்புகிறது. கெக்ரிலின் பசியை தூண்டக்கூடிய நொதி ஆகும். வயிற்றுப் பகுதியில் இருந்து, நரம்புகள் மூலம் மூளைக்கு செய்தி அனுப்பப்பட்டு கெக்ரிலின் உற்பத்தி தொடங்குகிறது. இதனால் நமக்கு பசி உருவாகிறது.

இது மட்டுமில்லாமல் பல்வேறு காரணங்களாலும் பசி உருவாகிறது. அவற்றை அறிந்து கொள்வோம்.

* பெண்களுக்கு தைராய்டு ஹார்மோன் அதிக அளவில் சுரக்கும் பொழுது பசி ஏற்படுகிறது.
* மாதவிடாய் வருவதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்பு (PMS) கரு முட்டை உருவாகும் நேரத்தில் அதிக அளவு பசி உண்டாகிறது.
* ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் பொழுது அதிக பசி உருவாகிறது.
* தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் அதிக அளவில் பசி உண்டாகிறது.
இவை இயற்கையாக பெண்கள் அனைவருக்கும் உண்டாகும் பசியாகும். ஆனால் மன அழுத்தத்தினாலும் அதிக அளவு பசி ஏற்படுகிறது. இது உடலுக்கு தீங்கானது.

அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படும்போது மூளையில் இருந்து எச்சரிக்கை சமிக்ஞை உடல் முழுவதும் அனுப்பப்படும். இதன் மூலம் இதய துடிப்பு அதிகமாகும். எனவே இதயம் அதிக அளவு ரத்தத்தை நுரையீரல் மற்றும் கை, கால்களுக்கு அனுப்பும்.

இந்த செயல்களால் உடல் உறுப்புகள் வேகமாக இயங்குவதன் மூலம், அதிக கலோரி இழப்பு ஏற்பட்டு, உடலில் இன்சுலின் அளவு குறைந்து பசி உண்டாகிறது.

செரட்டோனின் (Serotonin) என்னும் ஹார்மோன் நமது மனநிலை சரிவர செயல்பட முக்கியமானதாகும். இது பசி, தூக்கம், மகிழ்ச்சி ஆகியவற்றை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஹார்மோன் சரியாக சுரக்காத நிலையில், மன அழுத்தத்தை உருவாக்குவதன் மூலம் பசி மற்றும் தூக்கம் ஆகியவற்றில் மாறுதலை ஏற்படுத்துகிறது.

மன அழுத்தத்தில் இருக்கும்போது கார்டிசோல் எனும் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கிறது. இதன் மூலமாக மூளை அதிக அளவில் குளுக்கோஸை பயன்படுத்துவதால் பசி அதிகமாக ஏற்படுகிறது.

மன அழுத்தம் ஏற்படும்போது ஒருவர் தீவிரமாக சிந்திக்கத் தொடங்குகிறார். அதன் மூலம் உடல் சுழற்சி மற்றும் தூக்கம் பாதிப்புக்குள்ளாகிறது. தூக்கமின்மை உடலில் உள்ள கார்டிசோலை அதிகரித்து உடல் எடையை அதிகரிக்கிறது.

பசி மற்றும் மன அழுத்தம் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. மன அழுத்தம் அதிகரிக்கும் நிலையில் விரக்தி, சலிப்பு காரணமாக நொறுக்குத் தீனிகளை சிலர் அதிகமாக சாப்பிடுகின்றனர். இதன் காரணமாக உடல் எடை அதிகரிக்கின்றது. 

Next Story