வாழ்க்கைமுறை மாற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள்


வாழ்க்கைமுறை மாற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள்
x
தினத்தந்தி 3 Jan 2022 5:30 AM GMT (Updated: 1 Jan 2022 11:09 AM GMT)

உணவு, உறக்கம் வாழ்வியல் நடைமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள் பெண்களின் உடல் மற்றும் மனநலத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

கால ஓட்டத்துக்கு ஏற்றவாறு வாழ்க்கை முறையும் மாறிக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக ஏற்படும் எதிர்மறையான மாற்றங்கள் மூலம், ஆண்களை விட பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். உணவு, உறக்கம் வாழ்வியல் நடைமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள் பெண்களின் உடல் மற்றும் மனநலத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அவற்றை பற்றி தெரிந்துகொள்வோம்.

பெண்களின் ஆரோக்கியத்தில் ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாழ்க்கை முறையில் எதிர்மறை மாற்றங்கள் ஏற்படும்போது, ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கப்படும். இதன் காரணமாக முகப்பருக்கள், முடி உதிர்வு, உடல் பருமன், கருப்பை நீர்கட்டிகள், நீரிழிவு நோய், தைராய்டு குறைபாடு, மலட்டுத்தன்மை, பார்வைக் கோளாறுகள், குறைப்பிரசவம் போன்ற உடல் சார்ந்த பிரச்சினைகளும், மனஅழுத்தம், மனச்சோர்வு, படபடப்பு, உடல் உறவில் ஆர்வமின்மை, கோபம் போன்ற உளவியல் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. குடும்பத்தின் ஆணிவேர் பெண்கள் என்பதால் மேற்கண்ட பிரச்சினைகளின் தாக்கம் குடும்ப உறவுகளிலும் எதிரொலிக்கும்.

வாழ்க்கை முறையில் பெண்கள் ஏற்படுத்தும் ஒரு சில நேர்மறை மாற்றங்கள், அனைத்து எதிர்மறை மாற்றங்களையும் சீராக்கும். அவை:

உடற்பயிற்சி, மனநிலையை மேம்படுத்தும். தசை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். எனவே வாரத்தில் ஐந்து நாட்கள் மிதமான உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

ஆரோக்கியமான உணவு, உடலுக்கு ஊட்டம் அளிக்கும். எந்த காரணத்தினாலும் உணவைத் தவிர்க்கக் கூடாது. மாவுச்சத்து, பழங்கள் மற்றும் காய்கறிகள், பால், மீன் மற்றும் இறைச்சி போன்ற உணவுகளைச் சாப்பிடலாம். பல வண்ணங்கள் கொண்ட காய்கறி மற்றும் பழங்களைச் சாப்பிடுவது நல்லது.

போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து, உடல் மற்றும் மனநலத்துக்கு அடிப்படையானது. மேலும் காபி, வெள்ளை சர்க்கரை போன்றவற்றை அளவோடு சாப்பிட வேண்டும்.

உளவியல் ரீதியாக ஆரோக்கியமான வாழ்வுக்கு போதுமான தூக்கம் அடிப்படையானது. இரவில் ஏழு முதல் எட்டு மணி நேரம் ஆழ்ந்து தூங்க வேண்டும். இது மனநலத்தை மேம்படுத்த உதவும்.

இயற்கையாக, உடலில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் அவசர நிலையின் போது மட்டுமே சுரக்குமாறு அமைக்கப்பட்டிருக்கின்றன. வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக, நாம் பல நேரம் அவசர நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதன் மூலம் உடலும், மனமும் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. எனவே அமைதியான வாழ்க்கை முறையை மேற்கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும். எதையும் நிதானத்தோடு செய்வதற்குப் பழக வேண்டும்.

சிரிப்பதற்கும், இயற்கையை ரசிப்பதற்கும், குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருப்பதற்கும், உறவுகளோடு பேசுவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். மனதிற்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கை முறையில் இத்தகைய மாற்றங்களைக் கொண்டுவந்தால் சிறப்பாக வாழ முடியும். 

Next Story