திருமண சீர்வரிசையில் இடம்பெறும் காசிப் பானையின் பின்னணி


திருமண சீர்வரிசையில் இடம்பெறும் காசிப் பானையின் பின்னணி
x
தினத்தந்தி 17 Jan 2022 5:30 AM GMT (Updated: 15 Jan 2022 10:47 AM GMT)

செம்பால் செய்யப்பட்ட காசிப்பானையில் ஊற்றி வைத்த தண்ணீரைக் குடிப்பதால் பல நோய்களைத் தடுக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முடியும். இந்தத் தண்ணீர் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

பெண்களுக்குத் திருமணத்தின்போது கொடுக்கப்படும் சீர்வரிசையில் நிறைய பாத்திரங்கள் இடம் பெற்றிருக்கும். அவற்றில் முக்கியமாக இடம்பெறுவது காசிப்பானையாகும். அதன் பின்னணியை இங்கே காணலாம்.

காசுப் பானை எனும் காசிப்பானை:
‘காசிப் பானை’ முற்காலத்தில் ‘காசுப் பானை’ என்று அழைக்கப்பட்டது. ஏனென்றால் பழங்காலத்தில் நாணயங்கள் செம்பு எனும் உலோகத்தால் செய்யப்பட்டன. அந்தப் பானையும் செம்பின் மூலம் செய்யப்பட்டதால் ‘காசுப் பானை’ என்ற பெயர் வந்தது. காலப்போக்கில் பேச்சு வழக்கால் ‘காசிப் பானை’ என்று மாறியது.

ஆரோக்கியம் காக்கும் செம்பு:
செம்பு (தாமிரம்) பாக்டீரியா எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மை கொண்டது. பழங்காலத்தில் மக்களிடம் ஒரு வழக்கம் இருந்தது. கோவில் மற்றும் குடிநீர் குளங்களில் செம்பு நாணயங்களை போடுவார்கள். அவற்றில் உள்ள செம்பு தாதுகள் அந்த குளத்தில் கலந்து தண்ணீரை வலுப்படுத்தும். ஊர் மக்கள் தினமும் அந்த வளமான தண்ணீரை குடித்தால் அவர்கள் ஆரோக்கியமும் சீராக இருக்கும் என்பதே அதற்கு காரணம்.

மாறிவரும் உலகம்:
காலப்போக்கில் மக்கள் செம்புக் குடங்கள் அல்லது செம்பு பாத்திரங்களை பயன்படுத்துவது குறைந்தது. அனைத்து வீடுகளிலும் எவர் சில்வர் அல்லது அலுமினியப் பாத்திரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இருந்தபோதும் இன்றும் திருமணங்களில் பெண் வீட்டார், தங்கள் பெண்ணுக்குக் கொடுக்கும் சீர்வரிசையில் கண்டிப்பாக காசிப் பானையையும் சேர்த்துக் கொடுப்பார்கள். ஏனென்றால், மணமக்கள் அந்த செம்புப் பானையில் தண்ணீர் ஊற்றி குடித்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற ஐதீகம் உள்ளது.

காசிப் பானையின் நன்மைகள்:
செம்பால் செய்யப்பட்ட காசிப்பானையில் ஊற்றி வைத்த தண்ணீரைக் குடிப்பதால் பல நோய்களைத் தடுக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முடியும். இந்தத் தண்ணீர் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். எலும்புகளை வலுப்படுத்தும். இதய ஆரோக்கியத்தைச் சீராக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும்.

பாரம்பரியத்தில் ஒளிந்திருக்கும் அறிவியல்:
பல நூற்றாண்டுக்கு முன்னரே தமிழர்கள் தண்ணீரை ஆரோக்கியமாக பருகுவதற்கு காசிப் பானையைப் பயன்படுத்தி வந்தனர். இதன் காரணமாகவே தமிழக பாரம்பரியத்தில் தங்கள் பெண்ணுக்கு கொடுக்கும் சீர் வரிசையில், காசிப் பானையும் இடம் பெற்று இருப்பதை உறுதி செய்தார்கள். இதில் பாரம்பரியம் மட்டுமில்லாமல், உடல் ஆரோக்கியம் என்ற அறிவியலும் அடங்கியுள்ளது. நாமும் இதனைப் பின்பற்றி காசிப் பானையை வீடுகளில் பயன்படுத்த தொடங்குவோம்! 

Next Story