கோடையில் சானிடரி நாப்கின் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை


கோடையில் சானிடரி நாப்கின் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை
x
தினத்தந்தி 16 May 2022 10:28 AM IST (Updated: 16 May 2022 10:28 AM IST)
t-max-icont-min-icon

உடலோடு ஒட்டியிருக்கும் வகையிலான ஆடைகள் சிரமத்தை ஏற்படுத்தும். சருமத்தோடு ஒட்டாத, காற்றோட்டமான ஆடைகளை தேர்வு செய்து அணிய வேண்டும்.

கோடைகாலத்தில் வெப்பத்தின் காரணமாக, பெண்கள் சரும பாதிப்பு, வறட்சி, வியர்க்குரு போன்ற பிரச்சினைகளை சந்திப்பதோடு, உடலின் அந்தரங்கப் பகுதிகளில் அரிப்பு, எரிச்சல், அழற்சி போன்ற தொந்தரவுகளால் சிரமப்படுகிறார்கள். மாதவிடாய் நாட்களில் சானிட்டரி நாப்கின் பயன்படுத்தும்போது மேலும் அசவுகரியத்தை ஏற்படுத்தக்கூடும். இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்வது எப்படி என்பதை பார்ப்போம்.

நாப்கினை தேர்வு செய்தல்
பெரும்பாலான நாப்கின்கள் ஈரத்தை உறிஞ்சுவதற்காக, ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படுகின்றன. இது பெண்களுக்கு கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துவதோடு, தொடர்ந்து உபயோகித்தால் புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்தும்  உள்ளது. எனவே ரசாயனமற்ற நாப்கின்களை வாங்கி பயன்படுத்துவது நல்லது.

நாப்கினை மாற்றுதல்:
கோடைகாலத்தில் நாப்கின்களை 2 முதல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றுவது நல்லது. உதிரப்போக்கு அதிகமாக இருப்பவர்கள் இதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். நாப்கின்களை மாற்றும் போது கைகளைக் கழுவுதல் அவசியம். இது நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும்

இரண்டு நாப்கின்கள் கூடாது:
மாதவிடாயின் போது அதிகமான உதிரப்போக்கை உணரும் பெண்கள், அடிக்கடி நாப்கினை மாற்றுவதையும், ஆடைகளில் கறை படிவதையும் தவிர்ப்பதற்காக ஒரே நேரத்தில் இரண்டு நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். இது நோய் தொற்றுக்கு வழிவகுக்கும்.

சுத்தமாக பராமரித்தல்:
மாதவிடாய் காலத்தில் மட்டுமில்லாமல், அந்தரங்க உறுப்பை  எப்போதும் சுத்தமாய் வைத்திருத்தல் அவசியம். மாதவிடாய் நாட்களில் வெதுவெதுப்பான தண்ணீரைக் கொண்டும் சுத்தம் செய்யலாம். இதற்காக வேறு திரவத்தை பயன்படுத்தக்கூடாது.  மாதவிடாய் நாட்களில் இரண்டு முறை குளிப்பது, உடலை சுத்தமாக வைத்திருப்பதோடு, சுறுசுறுப்பையும் தரும்.

உடைகளில் கவனம்:
உடலோடு ஒட்டியிருக்கும் வகையிலான ஆடைகள் சிரமத்தை ஏற்படுத்தும். சருமத்தோடு ஒட்டாத, காற்றோட்டமான ஆடைகளை தேர்வு செய்து அணிய வேண்டும். நாப்கின்கள் வைத்திருக்கும் போது, இறுக்கமான உடைகள் அணிவதால் தொடை இடுக்குகளில் தடிப்பை உண்டாக்கி மேலும் அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

நாப்கினை அகற்றுதல்:
நாப்கின் பயன்படுத்துவது போலவே, அதை அகற்றுவதிலும் கவனம் தேவை. பயன்படுத்திய நாப்கின்களை முறையாக காகிதத்தில் சுற்றி குப்பைத் தொட்டியில் போடவேண்டும். குப்பைத் தொட்டியில் இருக்கும் நாப்கின்களையும் அவ்வப்போது அகற்றிவிட வேண்டும்.

உடல் ஆரோக்கியம் மற்றும் நீரேற்றம்:
கோடை காலத்தில் உடலில் நீரிழப்பு அதிகமாக ஏற்படுவதால் சோர்வு உண்டாகும். எனவே போதுமான அளவிற்கு தண்ணீர் குடிப்பதோடு, புத்துணர்வு தரும் பழச்சாறும் அருந்தலாம். ஒரு நாளில் குறைந்தது 9 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிறு வலியின் காரணமாக சிலர் சாப்பிடாமல் இருப்பார்கள். அதைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதோடு, எளிமையான உடற்பயிற்சிகள் செய்தால் உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கலாம். 
1 More update

Next Story