அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை- நடிகர் சோனு சூட்


Image Source : INSTAGRAM/SONU SOOD
x
Image Source : INSTAGRAM/SONU SOOD
தினத்தந்தி 21 Sep 2021 12:02 PM GMT (Updated: 21 Sep 2021 12:02 PM GMT)

ராஜ்யசபை எம்.பி. ஆகும் வாய்ப்பை இரண்டு முறை நிராகரித்ததாக நடிகர் சோனு சூட் கூறி உள்ளார்.

மும்பை

பிரபல இந்திப்பட வில்லன் நடிகர் சோனுசூட். இவர் இந்தியில் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில், சந்திரமுகி, ஒஸ்தி, தேவி போன்ற படங்களில் நடித்துள்ளார்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் சோனுசூட், ஒரு தொண்டு அறக்கட்டளையை தொடங்கினார். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு அதன்மூலம் உதவிகள் செய்தார். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் போய்ச்சேர ஏற்பாடு செய்தார். இதுபோன்ற நல்ல செயல்களால் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தார்.

இந்தநிலையில், நடிகர் சோனுசூட் வரிஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக ரியல் எஸ்டேட் சொத்து ஆவணங்கள் மூலம் வருமான வரித்துறைக்கு தெரியவந்தது. அதன் அடிப்படையில், கடந்த 15-ந் தேதி சோனுசூட்டுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனையை தொடங்கியது. மும்பை, லக்னோ, கான்பூர், ஜெய்ப்பூர், டெல்லி, குர்கான் ஆகிய நகரங்களில் 28 கட்டிடங்களில் சோதனை நடத்தப்பட்டது.நான்கு நாட்கள் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது.வருமான வரி சோதனையில் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் மூலமாக நடிகர் சோனு சூட் அரசியலில் இறங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ராஜ்யசபை எம்.பி. ஆகும் வாய்ப்பை இரண்டு முறை நிராகரித்ததாகவும், அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் பிரபல பாலிவுட் ஸ்டார் சோனு சூட்  தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், தம்மை ராஜ்யசபை எம்.பி. ஆக்குவதாக இரண்டு அரசியல் கட்சிகள் முன்வந்தன என்று தெரிவித்துள்ள அவர், அரசியலுக்கு வர நினைத்தால் அதை ஊரறிய அறிவிப்பேன் என சோனு சூட் கூறியுள்ளார்.

Next Story