ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு 116 ரன்கள் வெற்றி இலக்கு

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
துபாய்,
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய 49-வது லீக் ஆட்டத்தில் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கேன் வில்லியன்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற வில்லியம்சன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதனையடுத்து, ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் சஹா ஆகியோர் களமிறங்கினார். சஹா டக்-அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து ஜேசன் ராய் 10 ரன்களுக்கு அவுட் ஆக, ஐதராபாத் அணி 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடினார். அவர் 26 ரன்கள் எடுத்திருந்தபோது, ஷகிப் அல் ஹசனால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால் முதல் 10 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். ஐதராபாத் அணி வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் அவுட் ஆகி அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக டிம் சவுத்தி, வருண் சக்கரவர்த்தி, ஷிவம் மாவி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது.
Related Tags :
Next Story