கராச்சி டெஸ்ட்: பாகிஸ்தான் வெற்றி பெற இன்னும் 314 ரன்கள் தேவை இன்று கடைசி நாள் ஆட்டம்...!


கராச்சி டெஸ்ட்: பாகிஸ்தான் வெற்றி பெற இன்னும் 314 ரன்கள் தேவை இன்று கடைசி நாள் ஆட்டம்...!
x
தினத்தந்தி 16 March 2022 12:02 AM GMT (Updated: 16 March 2022 12:14 AM GMT)

பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள கராச்சி டெஸ்டில் பாகிஸ்தான் அணி 506 ரன்கள் இலக்கை நோக்கி ஆடுகிறது.


கராச்சி, 

பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள கராச்சி டெஸ்டில் பாகிஸ்தான் அணி 506 ரன்கள் இலக்கை நோக்கி ஆடுகிறது. கடைசி நாளில் ஆஸ்திரேலிய பவுலர்கள் மிரட்டுவார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான கராச்சியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 556 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 148 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. இருப்பினும் ‘பாலோ-ஆன்’ வழங்காத ஆஸ்திரேலியா 408 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடியது. 3-வது நாள் முடிவில் அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாளான நேற்று ஆஸ்திரேலியா சிறிது நேரம் பேட்டிங் செய்து விட்டு 2 விக்கெட்டுக்கு 97 ரன்னில் ‘டிக்ளேர்’ செய்தது. மார்னஸ் லபுஸ்சேன் 44 ரன்னில் போல்டு ஆனார். உஸ்மான் கவாஜா 44 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.

இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 506 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்தது. இதையடுத்து இதுவரை யாருமே எட்டிராத இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 21 ரன்னுக்குள் இமாம் உல்-ஹக் (1 ரன்), அசார் அலி (6 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை பறிகொடுத்து அதிர்ச்சிக்குள்ளானது.

அதன் பிறகு 3-வது விக்கெட்டுக்கு மற்றொரு தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக்கும், கேப்டன் பாபர் அசாமும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். ஷபிக் 20 ரன்னில் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற சுமித் கோட்டை விட்டார். இல்லாவிட்டால் பாகிஸ்தானின் நிலைமை மோசமாகியிருக்கும்.

அதன் பிறகு இந்த கூட்டணியை ஆஸ்திரேலிய பவுலர்களால் அசைக்க முடியவில்லை. 2 ஆண்டுக்கு பிறகு மூன்று இலக்கத்தை தொட்ட பாபர் அசாம் தனது 6-வது சதத்தை பதிவு செய்தார். ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 82 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. பாபர் அசாம் 102 ரன்களுடனும் (197 பந்து, 12 பவுண்டரி), அப்துல்லா ஷபிக் 71 ரன்களுடனும் (226 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் உள்ளனர்.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. பாகிஸ்தானின் வெற்றிக்கு இன்னும் 314 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 8 விக்கெட் உள்ளன. கடைசி நாளில் இவ்வளவு பெரிய இலக்கை விரட்டிப்பிடிப்பது கடினம் என்பதால் பாகிஸ்தான் வீரர்கள் டிரா செய்யும் நோக்குடன் விளையாடுவதற்கே அதிக வாய்ப்பு உள்ளது. கராச்சி மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி ஒரு போதும் வெற்றி பெற்றதில்லை. இந்த சோகத்துக்கு முடிவு கட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள் என்பதால் இந்த டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் விறுவிறுப்பையும், சுவாரஸ்யத்தையும் உருவாக்கியுள்ளது.

Next Story