ஐபிஎல் 2022 : ஐதராபாத் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்
Image Courtesy : Twitter Rajasthan Royalsராஜஸ்தான் அணி தரப்பில் சஹால் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
மும்பை,
15-வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி மும்பையில் உள்ள மஹாஸ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.
இரு அணிகளும் இந்த தொடரில் தங்கள் முதல் போட்டியை இன்று விளையாடினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 20 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் 35 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
சஞ்சு சாம்சன் 25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். மறுபக்கம் ஐதராபாத் பந்துவீச்சாளர்களை தேவ்தத் படிக்கல் துவம்சம் செய்தார். அவர் 29 பந்துகளில் 41 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. இதை அடுத்து 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.
தொடக்க வீரராக களமிறங்கிய கேன் வில்லியம்சன் 2 ரன்கள் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் தேவ்தத் படிக்கலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதை தொடர்ந்து ராகுல் திரிபாதி மற்றும் நிக்கோலஸ் பூரன் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகினர். மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் ஐதராபாத் அணி 29 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பிறகு களமிறங்கிய மார்க்ரம் - வாஷிங்டன் சுந்தர் ஜோடி நிலைத்து நின்று விளையாடினர். குறிப்பாக அதிரடி காட்டிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 14 பந்துகளில் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இருப்பினும் இறுதியில் ஐதராபாத் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் ராஜஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி தரப்பில் சஹால் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
Related Tags :
Next Story






