குருனால் பாண்டியாவின் அதிர்ஷ்டத்தால் பொல்லார்ட் பதிலுக்கு எதுவும் செய்யவில்லை- சுனில் கவாஸ்கர்

ஆட்டமிழந்து வெளியேறிய பொல்லார்ட்-க்கு பாண்டியா தலையில் முத்தம் கொடுத்தார்.
மும்பை,
ஐபிஎல் 15வது சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த தொடரில் கடந்த 24-ஆம் தேதி நடைபெற்ற 37-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதல் வெற்றியை தேடி சொந்த மைதானத்தில் களம் கண்ட மும்பை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் தோல்வி அடைந்தது. நடப்பு தொடரில் ஒரு வெற்றியை கூட பெறாத மும்பை அணி 8-வது தோல்வியை சந்தித்தது.
இந்த போட்டியில் மும்பை அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் பொல்லார்ட் 19 ரன்களில் மும்பை அணியின் முன்னாள் வீரர் குருனால் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அப்போது பொல்லார்ட் பெவிலியன் நோக்கி நடையைக் கட்ட, அவர் அருகில் சென்ற குருனால் பாண்டியா துள்ளிக்குதித்து பொல்லார்ட் தலையில் முத்தம் கொடுத்தார்.
ஆட்டமிழந்த விரக்தியில் சென்ற பொல்லார்ட், குருனால் பாண்டியா-விடம் பதிலுக்கு எதுவும் தெரிவிக்காமல் நடையை கட்டினார்.
இதை தொடர்ந்து மும்பை அணியின் ரசிகர்கள் குருனால் பாண்டியாவிற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், " பொல்லார்ட் நிச்சயம் அதை விரும்பி இருக்க மாட்டார் என்று எனக்குத் தெரியும். எவ்வளவு நல்ல நண்பர்களாக இருந்தாலும் பாண்டியா போட்டி முடிந்த பிறகு அவ்வாறு செய்து இருக்கலாம். பொல்லார்ட் பதிலுக்கு எதுவும் செய்யாதது பாண்டியா அதிர்ஷ்டம்" என அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story