2016–ம் ஆண்டு மோட்டார் வாகன வழக்கில் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.3.10 கோடி அபராதம் வசூல் போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் தகவல்


2016–ம் ஆண்டு மோட்டார் வாகன வழக்கில் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.3.10 கோடி அபராதம் வசூல் போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் தகவல்
x
தினத்தந்தி 31 Dec 2016 9:00 PM GMT (Updated: 31 Dec 2016 12:19 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் 2016–ம் ஆண்டு மோட்டார் வாகன வழக்கில் ரூ.3 கோடியே 10 லட்சத்து 56 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் 2016–ம் ஆண்டு மோட்டார் வாகன வழக்கில் ரூ.3 கோடியே 10 லட்சத்து 56 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கண்காணிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2015–ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம், மணக்கரை, முறப்பநாடு மற்றும் வல்லநாடு பகுதிகளில் ஏற்பட்ட சாதி மோதல்களை தடுக்கும் விதமாக அப்பகுதிகளில் இயங்கக் கூடிய தனியார் மற்றும் அரசு பஸ்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்படும் பஸ் மார்‌ஷல் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் சாதி மோதல்கள் குறைந்துள்ளன.

மாவட்டத்தில் சில இடங்களில் நடைபெற்ற வழிப்பறி கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களை தடுக்கவும், பெண்களை கேலி செய்தல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், ரோந்து செய்து குற்றங்களை தடுக்கும் விதமாக 2015–ம் ஆண்டு 29 மோட்டார் சைக்கிள் ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அது தற்போது 40–ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் வழிப்பறி உள்ளிட்ட குற்றங்கள் குறைந்துள்ளன.

கொலைகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2014–ம் ஆண்டு 86 கொலைகள் நடந்துள்ளன. 2015–ம் ஆண்டு 78 கொலைகள் நடந்துள்ளன. 2016–ம் ஆண்டு 62–ஆக குறைந்துள்ளது. அதன்படி 2016–ம் ஆண்டு 20 சதவீதம் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன.

2015–ம் ஆண்டு 251 கொலை முயற்சி வழக்குகளும், 2016–ம் ஆண்டு 184 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2015–ம் ஆண்டு 813 காய வழக்குகளும், 2016–ம் ஆண்டு 724 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2015–ம் ஆண்டு 5 ஆதாய கொலைகள் நடந்தன. 2016–ம் ஆண்டு 2 ஆதாய கொலைகள் நடந்துள்ளன.

கொள்ளை சம்பவத்தை பொறுத்தவரை, 2015–ம் ஆண்டு 59 வழக்குகளும், 2016–ம் ஆண்டு 55 வழக்குகளும் பதிவாகியுள்ளது. குற்ற வழக்குகளில் 2016–ம் ஆண்டு ரூ.1 கோடியே 93 லட்சத்து 1 ஆயிரத்து 95 மதிப்பிலான சொத்துகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகளின் செயல்பாட்டை தடுக்கும் விதமாக 2016–ம் ஆண்டு 50 குற்றவாளிகள் இனம் காணப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும், 2 ஆயிரத்து 327 பேர் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர். அதன் மூலம் 2016–ம் ஆண்டு குற்ற வழக்குகள் குறைந்துள்ளது.

ரூ.3.10 கோடி அபராதம்

தூத்துக்குடியில் வாகன விபத்துகளை தடுக்கும் வகையில் மோட்டார் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. அதன் மூலம் 2016–ம் ஆண்டு ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 952 மோட்டார் சிறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் ரூ.3 கோடியே 10 லட்சத்து 56 ஆயிரத்து 65 அபராதம் வசூலிக்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2016–ம் ஆண்டு 21 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 32 குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் ஆயுள் தண்டனை பெறப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2010–ம் ஆண்டிற்கு பிறகு காவல்துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த 8 அணியினரின் சார்பில் 250 பேர் கலந்து கொண்டனர்.

மேலும் வாகன விபத்துக்களை குறைப்பதற்காக ஹெல்மெட், சீட் பெல்ட் அணிய வலியுறுத்தி மாவட்ட முழுவதும் விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் முகாம் நடத்தப்பட்டது. சைபர் குற்றங்களை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும், வங்கிகளிலும் மற்றும் அரசு பஸ்களிலும் ஒட்டப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் கூறினார்.

பேட்டியின் போது கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தசாமி, துணை சூப்பிரண்டு சகிகலா, இன்ஸ்பெக்டர் பெர்னாட் சேவியர், சப்–இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story