விவசாயிகளின் மரணத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது மன்னார்குடி கூட்டத்தில் தா.பாண்டியன் பேச்சு


விவசாயிகளின் மரணத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது மன்னார்குடி கூட்டத்தில் தா.பாண்டியன் பேச்சு
x
தினத்தந்தி 7 Jan 2017 10:45 PM GMT (Updated: 7 Jan 2017 8:41 PM GMT)

விவசாயிகளின் மரணத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது மன்னார்குடி கூட்டத்தில் தா.பாண்டியன் பேச்சு

மன்னார்குடி,

விவசாயிகளின் மரணத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது என்று மன்னார்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தா.பாண்டியன் கூறினார்.

பொதுக்கூட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.பி. தியாகி எஸ்.ஜி.முருகையனின் 38-ம் ஆண்டு வீரவணக்க நாள் நினைவு தின பொதுக்கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த ராஜகோபாலபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வீரமணி தலைமை தாங்கினார். நாகை மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. எம்.செல்வராசு முன்னிலை வகித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா. பாண்டியன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மனிதநேயத்துடனும், மனசாட்சியோடும் வாழும் விவசாயிகளுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தண்ணீரின்றி பயிர்கள் கருகியதால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும், அதிர்ச்சியில் மரணம் அடைவதும் வேதனையாக உள்ளது. கருப்பு பணம் ஒழிப்பு என்ற பெயரில் பிரதமர் மோடி மக்களை தெருவில் நிற்க வைத்துள்ளார்.

பயிர்க்கடன்

விவசாயிகளின் மரணத்தை தடுக்க அவர்கள் வாங்கிய பயிர்க்கடன் தற்பொழுது வசூலிக்கப்படாது என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்தால், இதுபோன்ற சம்பவங்கள் தொடராது. இது போன்ற நம்பிக்கையான வார்த்தைகளை கூட மத்திய, மாநில அரசு அறிவிக்க முன்வராதது கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் மரணத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடடிவக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ரூ.4 லட்சம் கோடியினை தள்ளுபடி செய்தது போல் விவசாயிகள் பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தா.பாண்டியன் முன்னிலையில் பல்வேறு அரசியல் கட்சியிலிருந்து விலகி 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தனர்.

கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ், நகரசெயலாளர் வி.கலைச்செல்வன், ஒன்றிய துணை செயலாளர் எஸ்.ராகவன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.நாகேஷ், ஒருங்கிணைப்பாளர் துரைஅருள்ராஜன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் எஸ்.ராஜாங்கம், செயலாளர் என்.மகேந்திரன், மாணவர் மன்ற ஒன்றிய செயலாளர் எஸ்.பாலமுருகன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story