திருப்பத்தூர் நின்ற நாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்


திருப்பத்தூர் நின்ற நாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
x
தினத்தந்தி 8 Jan 2017 11:00 PM GMT (Updated: 8 Jan 2017 1:09 PM GMT)

திருப்பத்தூர் நின்ற நாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் திறப்பு திருப்பத்தூர் நின்ற நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நேற்று சொர்

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் நின்ற நாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சொர்க்கவாசல் திறப்பு

திருப்பத்தூர் நின்ற நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. பின்னர், உற்சவரான நாராயண பெருமாள் சாமிக்கு சிறப்பு அபிஷேகமாக பால், தயிர், இளநீர், மஞ்சள், திருமஞ்சனம், உள்ளிட்ட 11 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதன்பின்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து சாமி உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளினார். பின்னர், தீபாராதனை நடந்தது. அதன்பின்பு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அந்த வழியாக சாமி வெளியே வந்து கோவிலை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சொர்க்கவாசல் வழியாக சாமியைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து திருநாள் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் சாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அர்ச்சனை செய்து பெருமாளை வழிபட்டனர்.

தொடர்ந்து சாமி இரவு 7 மணிக்கு திருவீதி புறப்பாடாகி தேரோடும் வீதி, அஞ்சலக வீதி, பஸ் நிலையம், நான்கு ரோடு வழியாக கோவிலை வந்தடைந்தார்.

சிவகங்கை கோவில்

இதேபோன்று சிவகங்கையில் உள்ள சுந்தர்ராஜபெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சாமி ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளி சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா, கோவிந்தா என கோ‌ஷம் எழுப்பினர். இதைதொடர்ந்து சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story