செம்பட்டி அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


செம்பட்டி அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Jan 2017 10:00 PM GMT (Updated: 8 Jan 2017 6:57 PM GMT)

செம்பட்டி அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் தட்டுப்பாடு திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வீரக்கல் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியின் அருகில் உள்ளது சூசைப்பட்டி. இந்த கிராமத்தின் தெற்கு பகுதி

செம்பட்டி,

செம்பட்டி அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் தட்டுப்பாடு

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வீரக்கல் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியின் அருகில் உள்ளது சூசைப்பட்டி. இந்த கிராமத்தின் தெற்கு பகுதி வீரக்கல் ஊராட்சி கட்டுப்பாட்டிலும், வடக்கு பகுதி அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி கட்டுப்பாட்டிலும் உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குழாய்கள் மூலம் 2 ஊராட்சி நிர்வாகங்களும் குடிநீர் வழங்கி வந்தது.

இந்த நிலையில் 3 மாதமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சூசைப்பட்டி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பக்கத்து ஊர்களுக்கு சென்று ஒரு குடம் தண்ணீரை ரூ.5–க்கு வாங்கி வரும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

சாலை மறியல்

இது குறித்து வீரக்கல், அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி நிர்வாகிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பித்தளைப்பட்டி–கன்னிவாடி சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் குறித்து தகவலறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் விரைந்து சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.


Next Story