வனப்பகுதியில் வறட்சி: விவசாய நிலங்களை தேடி வரும் காட்டு யானைகள்


வனப்பகுதியில் வறட்சி: விவசாய நிலங்களை தேடி வரும் காட்டு யானைகள்
x
தினத்தந்தி 3 March 2017 10:00 PM GMT (Updated: 3 March 2017 6:02 PM GMT)

வனப்பகுதியில் வறட்சி: விவசாய நிலங்களை தேடி வரும் காட்டு யானைகள் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

பந்தலூர்,

வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளதால் விவசாய நிலங்களை தேடி காட்டு யானைகள் வரத்தொடங்கி உள்ளன. இதனால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

காட்டு யானைகள் முகாம்

பந்தலூர் தாலுகா சேரங்கோடு அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்.2 திருவள்ளூவர் நகர், சிங்கோனா, படச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக குட்டிகளுடன் கூடிய 10 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து குடியிருப்புகள், விவசாய நிலங்களை முற்றுகையிட்டு வருகின்றன. நேற்று முன்தினம் இரவு சேரங்கோடு, சின்கோனா தேயிலை தோட்டத்துக்குள் காட்டு யானைகள் புகுந்து முகாமிட்டு வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் வனச்சரகர் (பொறுப்பு) மனோகரன், வன காப்பாளர்கள் பிரகாஷ், ராபர்ட் வில்சன் உள்ளிட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

தீவிர கண்காணிப்பு

இதேபோல் பந்தலூர் அருகே 10–ம் நெம்பர் ஆதிவாசி காலனி, மேங்கோரேஞ்ச், அத்திக்குன்னு உள்ளிட்ட பகுதிகளில் 5 காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன. இதுகுறித்த புகாரின் பேரில் தேவாலா வனச்சரகர் சரவணன், வனகாப்பாளர் லூயிஸ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் யானைகள் அங்கிருந்து செல்லவில்லை. இதனால் வனத்துறையினர் அப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, வறட்சியால் வனப்பகுதியில் பசுந்தீவனம் கிடைப்பது இல்லை. மேலும் நீர்நிலைகள் வறண்டு கிடப்பதால் தாகத்தை தணிக்கவும், உணவு தேவையை பூர்த்தி செய்ய காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. இதனால் எதிர்காலத்தில் வனப்பகுதியில் தடுப்பணைகள் அதிகளவு கட்டி பசுந்தீவனங்களை பெருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story