கோவில்பட்டி அருகே பரிதாபம் மழையின்றி பயிர்கள் கருகியதால் விவசாயி தற்கொலை


கோவில்பட்டி அருகே பரிதாபம் மழையின்றி பயிர்கள் கருகியதால்  விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 3 March 2017 8:45 PM GMT (Updated: 3 March 2017 6:17 PM GMT)

மழையின்றி பயிர்கள் கருகிய வேதனையில் மரத்தில் தூக்குப்போட்டு விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

கோவில்பட்டி,

மழையின்றி பயிர்கள் கருகிய வேதனையில் மரத்தில் தூக்குப்போட்டு விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

பயிர்கள் கருகின

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள படர்ந்தபுளியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 44), விவசாயி. இவர், தனது மானாவாரி நிலத்தில் மக்காச்சோளம், மிளகாய் பயிரிட்டு இருந்தார். இதற்காக, அவர் சிலரிடம் பணம் கடன் வாங்கி செலவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பருவமழை பொய்த்ததால், அனைத்து பயிர்களும் தண்ணீரின்றி கருகின.

இதனால் வாங்கிய கடனை எப்படி திருப்பி செலுத்துவது? என்று நாராயணசாமி வருத்தம் அடைந்துள்ளார். அவர் நேற்று காலை 6 மணி அளவில் தனது விவசாய நிலத்துக்கு சென்றார். அங்குள்ள ஒரு மரத்தில் நாராயணசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இதற்கிடையே நீண்ட நேரமாகியும் நாராயணசாமி வீட்டுக்கு திரும்பி வராததால், அவரை தேடி குடும்பத்தினர் சென்றனர். அங்கு நாராயணசாமி தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். தகவல் அறிந்ததும், கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். நாராயணசாமியின் உடலைக் மீட்டு பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட நாராயணசாமிக்கு சோலையம்மாள் (35) என்ற மனைவியும், விசுவாஸ் (11), விவாஸ் (8) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

பயிர்கள் கருகிய வேதனையில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story