திருச்செங்கோடு நகராட்சி பகுதிக்கு விரைவில் சீரான குடிநீர் வினியோகம் நீரேற்று நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் தங்கமணி தகவல்


திருச்செங்கோடு நகராட்சி பகுதிக்கு விரைவில் சீரான குடிநீர் வினியோகம் நீரேற்று நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் தங்கமணி தகவல்
x
தினத்தந்தி 11 March 2017 10:45 PM GMT (Updated: 11 March 2017 1:49 PM GMT)

திருச்செங்கோடு நகராட்சி பகுதிக்கு விரைவில் குழாய் மூலம் சீரான குடிநீர் வினியோகம்

நாமக்கல்,

அமைச்சர் தங்கமணி ஆய்வு

திருச்செங்கோடு நகராட்சி பகுதிக்கு சீரான குடிநீர் வழங்கிட களியனூர் ஊராட்சி ஆவத்திபாளையத்தில் உள்ள நீரேற்று நிலையங்களில் காவிரி ஆற்றிலிருந்து கூடுதல் தண்ணீர் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:–

திருச்செங்கோடு நகராட்சியில் கடந்த சில நாட்களாக குடிநீர் மக்களுக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையை ஈடுசெய்வதற்கு லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கடும் வறட்சியின் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வற்றி விட்டதால், நீரேற்று நிலையங்களிலிருந்து எடுக்கும் நீர் குறைவாகவே இருந்து வந்தது.

சீரான குடிநீர்

இதனை சரி செய்வதற்கு காவிரியில் கூடுதல் மோட்டார் பொருத்தப்பட்டு, குழாய்கள் மூலம் நீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்று விரைவில் திருச்செங்கோடு நகராட்சி பொதுமக்களுக்கு குழாய் மூலம் சீரான குடிநீர் வழங்கப்படும். திருச்செங்கோடு பகுதி மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றிட துரிதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு சில நாட்களில் அனைத்து பணிகளும் நிறைவேற்றப்பட்டு, திருச்செங்கோடு பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் தொடர்ந்து வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தங்கமணி கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி, உதவி கலெக்டர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் சுப்பிரமணி, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுமுன்னாள் தலைவர் செந்தில், பள்ளிபாளையம் நகர்மன்ற முன்னாள் தலைவர் வெள்ளியங்கிரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story