1½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயம்


1½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயம்
x
தினத்தந்தி 2 April 2017 10:45 PM GMT (Updated: 2 April 2017 8:47 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கணேஷ் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகராட்சி கோவில்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி பேசினார். அப்போது அவர் பேசிய தாவது:-

புதுக்கோட்டை மாவட்டத் தில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 904 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

1,356 மையம்

இந்த முகாமை நடத்திட சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, வருவாய்த்துறை உள்பட பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த மற்றும் தனியார் அமைப்புகளை சேர்ந்த 5 ஆயிரத்து 430-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள், அனைத்து அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஸ் நிலையங்கள், ரெயில்வே நிலையங்கள் போன்ற 1,356 மையங்களில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இந்த முகாமின் மூலம் 5 வயதிற்குட்பட்ட ஒரு குழந்தை கூட விடுபடாமல் அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும் இந்தியாவில் போலியோ நோய் ஒழிப்பு நடவடிக்கைகளில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் சுகாதாரத்துறை இணை இயக்குனர்கள் சுரேஷ்குமார், பரணிதரண், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சுங்கச்சாவடி

இதைப்போல புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம், திருமயம், இலுப்பூர், அன்னவாசல், நார்த்தாமலை, கீரனூர், விராலிமலை, கீரமங்கலம், வடகாடு, ஆலங்குடி, ஆவுடையார்கோவில், அறந்தாங்கி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், கறம்பக்குடி, பொன்னமராவதி, காரையூர், ராயவரம், நமணசமுத்திரம், கந்தர்வகோட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சுங்கச்சாவடிகள் உள்பட பல பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது. 

Next Story