தடையின்றி குடிநீர் வழங்க கோரி சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


தடையின்றி குடிநீர் வழங்க கோரி சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 6 May 2017 11:00 PM GMT (Updated: 6 May 2017 9:09 PM GMT)

திருக்காட்டுப்பள்ளி அருகே தடையின்றி குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருக்காட்டுப்பள்ளி,

பூதலூர் அருகே உள்ள பழமார்நேரி ஊராட்சியில் அம்மன் நகர் என்ற பகுதி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதிக்கு பழமார்நேரி ஊராட்சியில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அம்மன் நகர் மக்கள் நேற்று காலை தடையின்றி குடிநீர் வழங்கக் கோரி திடீரென திருக்காட்டுப்பள்ளி- தோகூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையில் வாகனங்கள் வரிசையாக நின்றன.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மற்றும் போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாசில்தார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. மேலும் பூதலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சித்ரா சம்பவ இடத்துக்கு வந்து அம்மன் நகர் மக்களிடம் பேசி தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Related Tags :
Next Story