வேலூரில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கம்


வேலூரில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கம்
x
தினத்தந்தி 12 Jun 2017 11:00 PM GMT (Updated: 12 Jun 2017 8:59 PM GMT)

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கம் நடந்தது. இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றனர்.

வேலூர்,

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் சமூக நலத்துறை மற்றும் குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு இயக்கம் ஆகியவை சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு கையெழுத்து இயக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் தலைமை தாங்கி, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
தொழிலாளர் நலத்துறை இணை இயக்குனர் ராஜபாண்டி உள்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு கையெழுத்திட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

மேலும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு பற்றி ஆட்டோ, பஸ், மோட்டார்சைக்கிள் போன்றவற்றில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய ‘ஸ்டிக்கர்களை’ ஒட்டினர். நிகழ்ச்சியில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

ஊக்கத்தொகை

அதைத்தொடர்ந்து பழைய பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர்.

குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்ற 6 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.1000 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. அதேபோல், அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Next Story