மீன்பிடி தடைக்காலம் நாளை முடிகிறது: கடலுக்கு செல்ல தயார் நிலையில் விசைப்படகு மீனவர்கள்


மீன்பிடி தடைக்காலம் நாளை முடிகிறது: கடலுக்கு செல்ல தயார் நிலையில் விசைப்படகு மீனவர்கள்
x
தினத்தந்தி 13 Jun 2017 4:30 AM IST (Updated: 13 Jun 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடி தடைக் காலம் நாளை (புதன் கிழமை) முடிவடைவதை தொடர்ந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தயார் நிலையில் விசைப்படகு மீனவர்கள் உள்ளனர். மேலும் படகுகளில் டீசல், ஐஸ் கட்டிகள் ஏற்றும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாகப்பட்டினம்,

1983-ம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் உட்பிரிவுகளின் கீழ் கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழ்நாட்டின் கிழக்கு கடல் நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும், அதாவது திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரி கடற்பகுதி வரையில் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்க காலத்தில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் மே மாதம் 29-ந்தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இந்த மீன்பிடி தடைக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டு ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நாளை (புதன்கிழமை) முடிவடைகிறது. அதைதொடர்ந்து நாளை நள்ளிரவு முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல உள்ளனர்.

ஐஸ் கட்டி தயாரிக்கும் பணி

மீன்பிடி தடைக்காலம் முடிந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல உள்ள நிலையில், கடந்த 2 நாட்களாக நாகையில் உள்ள ஐஸ் பிளாண்டுகளில் ஐஸ்கட்டிகள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் மீன்பிடிக்க தேவையான மீன்பிடி வலைகள், மீன்பிடி சாதனங்கள், ஒருவாரம் கடலில் தங்கி மீன்பிடிக்க தேவையான டீசல், மீன்களை பதப்படுத்துவதற்கு தேவையான ஐஸ் கட்டிகள் அனைத்தும் படகுகளில் நிரப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
1 More update

Next Story