ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை மைத்துனர் கைது


ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை மைத்துனர் கைது
x
தினத்தந்தி 13 Jun 2017 10:15 PM GMT (Updated: 13 Jun 2017 8:29 PM GMT)

கலசபாக்கம் அருகே ஆட்டோ டிரைவரை அடித்துக்கொலை செய்த அவரது மைத்துனரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கலசபாக்கம்,

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த வடபுழுதியூர் அருகே உள்ள தோப்பு பகுதியை சேர்ந்தவர் ரகுராமன் (வயது 38), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி ஜெயா (27). இவர்களுக்கு மோகன் (6), விஷ்ணு (2½) என 2 மகன்கள் உள்ளனர். ரகுராமனின் தங்கை விமலாவை (27) அதே பகுதியில் வசிக்கும் லாரி டிரைவர் ரமேஷ் (40) திருமணம் செய்துள்ளார்.

இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம், தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஜெயாவுக்கு வேறு நபர்களுடன் தொடர்பு இருக்கலாம் என ரகுராமன் சந்தேகப்பட்டு அவரை அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அடித்துக்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியை ரகுராமன் சரமாரியாக தாக்கியுள்ளார். இதைக்கண்ட ரமேஷ் ‘ஜெயாவை ஏன் அடிக்கடி அடித்து துன்புறுத்துகிறாய்’ என்று அவரிடம் கேட்டுள்ளார். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த ரமேஷ் சரமாரியாக ரகுராமனை அடித்து, உதைத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரகுராமன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து ரமேஷ் அங்கிருந்து தப்பியோடினார்.

மயங்கி விழுந்த ரகுராமனை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக நார்த்தாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ரகுராமன் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

லாரிடிரைவர் கைது

இந்த சம்பவம் குறித்து ஜெயா கலசபாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story