அரசு சாலைப்போக்குவரத்துக் கழகத்தில் முறைகேடு நடந்துள்ளது சட்டசபையில் சிவா எம்.எல்.ஏ. புகார்


அரசு சாலைப்போக்குவரத்துக் கழகத்தில் முறைகேடு நடந்துள்ளது சட்டசபையில் சிவா எம்.எல்.ஏ. புகார்
x
தினத்தந்தி 16 Jun 2017 12:02 AM GMT (Updated: 16 Jun 2017 12:02 AM GMT)

புதுவை சாலைப்போக்குவரத்து கழகத்தில் பஸ் ரூட் வழங்கியது, பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடந்து இருப்பதாக சட்டசபையில் சிவா எம்.எல்.ஏ. புகார் தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா எழுப்பிய கேள்வியை தொடர்ந்த நடந்த விவாதம் வருமாறு:–

விசாரணை அறிக்கை

சிவா: புதுவை சாலைப்போக்குவரத்து கழகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமி‌ஷன் அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதா?

அமைச்சர் ஷாஜகான்: வளர்ச்சி ஆணையர் நரேந்திர குமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிவா: கடந்த ஒரு வருடமாக என்ன செய்தீர்கள்?

அமைச்சர் ஷாஜகான்: விசாரணை நடந்து அறிக்கை தயாராகி வருகிறது.

சிவா: இந்த கழகத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்து உள்ளது. பொருட்கள் வாங்கியது, தனியாருக்கு சாதகமாக நேரங்களை மாற்றியது, தனியாருக்கு பஸ்ரூட் வழங்கியது என பல உள்ளது.

நடவடிக்கை எடுப்போம்

அமைச்சர் ஷாஜகான்: உங்களிடம் இருக்கும் ஆதாரங்களை கொடுங்கள். அதுகுறித்தும் விசாரிக்க சொல்லலாம். தவறு நடந்திருந்தால் அதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்.

சபாநாயகர் வைத்திலிங்கம்: ஆதாரங்கள் இருந்தால் தொழிலாளர்களும் தரலாம். இதுகுறித்து சாலைப்போக்குவரத்து கழக நோட்டீசு போர்டில் போடுங்கள். அதேபோல் ரோடியர் மில்லிலும் செய்யலாம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.


Next Story