இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது வருகிற 7–ந்தேதி சப்பரபவனி
மானாமதுரை,
மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. தமிழக அரசால் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதுபோன கிறிஸ்தவ முக்கிய விழாக்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெறும். அன்றைய தினங்களில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து இந்த திருப்பலி நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். தமிழகத்திலேயே ஏசுநாதன் தனது இடதுபக்க இருதயத்தை காண்பித்தப்படி உள்ள ஒரே ஆலயம் இதுதான்.
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழா சிறப்பாக நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினந்தோறும் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பங்குத்தந்தைகள் கலந்து கொண்டு ஏசு நாதரின் வாழ்வின் அம்சங்களை எடுத்துரைப்பார்கள்.
இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சிவகங்கை மறை மாவட்ட பொருளாளர் சந்தியாகு கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். ‘இறைவனை காணும் இதயமாய்‘ என்ற தலைப்பில் சந்தியாகு உரையாற்றினார்.
விழாவின் 9–ம் நாள் நிகழ்ச்சியாக வருகிற 7–ந்தேதி சப்பர பவனியும், சிறப்பு திருப்பலியும் நடைபெறுகிறது. இதில் சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசை மாணிக்கம் கலந்துகொள்கிறார். 10–ம் நாள் நிகழ்ச்சியாக 8–ந் தேதி நற்கருணை விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திரு இருதய ஆண்டவர் திருத்தல அருட்பணியாளர் ரெமிஜியஸ், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செல்ஸ் பேரவை உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.






