தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு


தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
x
தினத்தந்தி 7 July 2017 8:00 PM GMT (Updated: 7 July 2017 7:00 PM GMT)

தூத்துக்குடி அருகே நேற்று நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்களை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே நேற்று நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்களை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கடலில் தத்தளிப்பு

தூத்துக்குடி சாமுவேல்புரத்தை சேர்ந்தவர் காதர்மைதீன். இவருடைய மகன் சம்சுதீன்(வயது 45). இவர் தனக்கு சொந்தமான நாட்டுபடகில், திரேஸ்புரத்தை சேர்ந்த பிச்சையா மகன் லெலஸ்டர்(56), கருப்பணன் மகன் ராஜ்(54), லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த மரியபிச்சை மகன் சவேரியாபிச்சை(65) ஆகியோருடன் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.

தூத்துக்குடியில் இருந்து சுமார் 13 கடல்மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக படகின் அடிப்பகுதியில் ஓட்டை விழுந்தது. இதனால் கடல்நீர் படகுக்குள் புகுந்தது. படகு தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது.

மீனவர்கள் மீட்பு

மூழ்கிக் கொண்டிருந்த படகில் இருந்த 4 பேரும் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்தனர். உடனடியாக 1093–க்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து தூத்துக்குடி கடலோர காவல்படை ரோந்து கப்பல் அபிராஜ் மூலம் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்த 4 மீனவர்கள் மற்றும் படகையும் அவர்கள் மீட்டு கரைக்கு பத்திரமாக கொண்டு வந்தனர்.

கடலில் தத்தளித்த மீனவர்களை பத்திரமாக மீட்டு வந்த கடலோர காவல்படையினரை மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர் பாராட்டினர்.


Next Story