மதுரவாயலில் கியாஸ் கசிவால் வீட்டில் தீ விபத்து; ஒருவர் படுகாயம்


மதுரவாயலில் கியாஸ் கசிவால் வீட்டில் தீ விபத்து; ஒருவர் படுகாயம்
x
தினத்தந்தி 7 Aug 2017 10:30 PM GMT (Updated: 7 Aug 2017 6:40 PM GMT)

மதுரவாயலில், கியாஸ் கசிவின் காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.

பூந்தமல்லி,

மதுரவாயலை அடுத்த வானகரம், மேட்டுக்குப்பம், முஸ்தபா தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் விக்னேஷ்(வயது23). ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.

நேற்று காலை விக்னேஷ் தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டரில் திடீரென கசிவு ஏற்பட்டது.

இதனால் வீட்டுக்குள் தீ பிடித்தது. சற்று நேரத்தில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது.

அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விக்னேஷின் உடலில் தீப்பற்றிக் கொண்டது. அவர் அலறிஅடித்தபடி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விக்னேஷ் உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து, அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலத்த தீக்காயம் அடைந்த அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வானகரம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த கட்டில், பீரோ, டி.வி., மின் விசிறி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகின.

இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story