ரெயிலில் கடத்த முயன்ற ரூ.10 கோடி போதை பொருள் பறிமுதல் வாலிபர் கைது


ரெயிலில் கடத்த முயன்ற ரூ.10 கோடி போதை பொருள் பறிமுதல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Aug 2017 10:45 PM GMT (Updated: 12 Aug 2017 7:51 PM GMT)

சென்னையில் இருந்து டெல்லிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கடத்த முயன்ற ரூ.10 கோடி மதிப்பிலான போதை பொருளை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை,

சென்னை சென்டிரலில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு ரெயில் நிலையத்தின் 5-வது பிளாட்பாரத்தில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது திடீரென வந்த தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் உதவியுடன் 5-வது பிளாட்பாரத்தில் ரெயிலில் ஏற காத்திருந்த பயணிகளிடம் சோதனை செய்தனர். இதனால் பயணிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சோதனையின் போது ரெயிலின் ஏ.சி.பெட்டியின் ‘சி’ கிளாசில் சந்தேகப்படும்படியாக இருந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் 3 கிலோ 100 கிராம் அளவிலான ‘கொக் கைன்’ போதை பொருள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதை பறிமுதல் செய்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த விஷால் (வயது 27) என்பதும், போதை பொருளை அவர் டெல்லிக்கு கொண்டு சென்று தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவரிடம் ஒப்படைக்க இருந்ததும் தெரியவந்தது.

ரூ.10 கோடி

இதுகுறித்து சோதனையில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் விலை உயர்ந்த போதை பொருட்களை கடத்தி செல்ல இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரெயில்வே பாதுகாப்புப்படையினர் உதவியுடன் சோதனை நடத்தி, விஷாலை கைது செய்து போதை பொருளை பறிமுதல் செய்தோம். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.10 கோடி ஆகும்.

டெல்லியில் விஷாலிடம் போதை பொருளை பெற இருந்தவர் யார்? அவருக்கும், விஷாலுக்கும் என்ன தொடர்பு? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story