நெல்லையில் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நெல்லையில் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2017 10:45 PM GMT (Updated: 16 Aug 2017 7:51 PM GMT)

நெல்லையில் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

கிராமப்புறங்களில் தபால் சேவைகளை செய்தல், தபால் நிலையங்களில் பணபரிவர்த்தனை செய்தல், மணியாடர் வழங்குதல், அஞ்சல் ஆணை வழங்குதல், ஸ்டாம் விற்பனை செய்தல் உள்ளிட்ட பணிகளை கிராமப்புறங்களில் பணியாற்றக்கூடிய தபால் ஊழியர்கள் செய்து வருகிறார்கள். மேலும் கிராமங்களில் உள்ள தபால்களையும், கிராமப்புற தபால் நிலையங்களில் இந்தியா முழுவதும் 3 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். தமிழகத்தில் மட்டும் 18 ஆயிரம் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை மாத சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் தங்களுக்கு தபால் துறை நிரந்தர ஊழியர்களுக்கு இணையான சம்பள உயர்வு வழங்கவேண்டும். 7–வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். கமலேஷ் சந்திரா குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 500 கிராமப்புற அஞ்சல் நிலையங்களில் இந்த சங்கத்தில் உள்ள 300–க்கும் மேற்பட்ட தபால் நிலைய ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் நெல்லை சந்திப்பு தபால் நிலையத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் ஞானபாலசிங் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் போராட்டத்தையொட்டி கிராமப்புறங்களில் மணியாடர், தபால் சேவைகள் மற்றும் தபால் நிலையங்களில் பணம் போடுதல், எடுத்தல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.


Next Story