சேலம் அருகே கலப்படம் கண்டுபிடிப்பு: ஜவ்வரிசி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு


சேலம் அருகே கலப்படம் கண்டுபிடிப்பு: ஜவ்வரிசி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 9 Sep 2017 10:45 PM GMT (Updated: 9 Sep 2017 10:30 PM GMT)

சேலம் அருகே கலப்படம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் ஜவ்வரிசி ஆலைக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டத்தில் 164 ஜவ்வரிசி ஆலைகள் உள்ளன. இவற்றில் சில நிறுவனங்களில் மக்காச்சோளமாவு, இன்டஸ்ட்ரியல் ஸ்டார்ச் மற்றும் அனுமதிக்கப்படாத கெமிக்கல் பயன்படுத்தி வருவதை தடுக்கும் நோக்கில் உணவு பாதுகாப்புத்துறை, சேகோ சர்வ், வணிகவரித்துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தொழிலாளர் நலத்துறை, தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகிய துறைகள் அடங்கிய ஆய்வுக்குழு அமைக்கப்பட்டிருந்தது.

இந்த குழுவினர் முதல்கட்டமாக அயோத்தியாப்பட்டணம் பகுதிகளில் ஆய்வு செய்தது. அப்போது 4 ஜவ்வரிசி ஆலைகள் ஆய்விற்குஉட்படுத்தப்பட்டன. அதில் ஒரு ஆலையில் அனுமதிக்கப்படாத அமிலம் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், ஜவ்வரிசியில் கலப்படம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த ஆலைக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் ‘சீல்’ வைத்தனர்.

மற்றொரு ஆலையில் மக்காச்சோளமாவு கலப்படமிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 12 ஆயிரம் கிலோ ஜவ்வரிசியை பறிமுதல் செய்து உணவு மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற ஆய்வுகள் இனிவரும் காலங்களில் தொடர்ந்து நடத்தப்படும்.
எனவே, கலப்படம் ஏதுமின்றி ஜவ்வரிசியை தயாரிக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

மேலும், ஓமலூர் அருகே உள்ள சக்கரைசெட்டிப்பட்டி கிராமத்தில் உள்ள 2 கரும்பாலைகளில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது ஒரு கரும்பாலையில் இருந்த 9 மூட்டை சர்க்கரை, மற்றொரு கரும்பாலையில் 7 மூட்டை சர்க்கரை மற்றும் ஒரு லாரி பறிமுதல் செய்யப்பட்டு உணவு மாதிரி எடுக்கப்பட்டது. இந்த ஆலைகள் மீது கலப்படப் பொருட்கள் பயன்படுத்தியதற்காக வழக்குப்பதிவு செய்யப் படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story